ஞாயிறு, 9 டிசம்பர், 2012

சிலம்பம்

அவர்கள். 
இதை பதிவு செய்தமைக்காக அவருக்கு நன்றியும் 
உங்களிடம் இந்த பதிவையும் விடுகிறோம்...
 
தமிழரின் பழமை வாய்ந்த விளையாட்டுகளில் பல்லோராலும் பரவலாக அறியப்பட்டிருக்கின்ற விளையாட்டு சிலம்ப விளையாட்டாகும். இவ்விளையாட்டானது ஆண்களுக்கு உரிய விளையாட்டாகும். 
 
இவ்விளையாட்டு பரத நாட்டியத்தோடு ஒத்துபோகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். 
பழங்காலத்தில் மலைவாழ் மக்கள் விலங்குகளை வேட்டையாடவும், கொடுவிலங்குகளின் தாக்குதலை எதிர்கொள்ளவும் 
கம்புகளைக் கருவியாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். 
இதுவே, பின்னர் சிலம்பக் கலையாக வளர்ச்சிப்பெற்று வந்திருக்கின்றது. 
 
மேலும் இதுபற்றி தெரிந்துகொள்ள... 
 
 http://tamilaalayam.blogspot.in/2009/05/blog-post.html

திங்கள், 3 டிசம்பர், 2012

கலைமணி நாட்டிய தாரகை பவாணி குகப்பிரியா


தமிழ் mirror இணைய இதழுக்காக கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றும் நாட்டிய கலைமணி நாட்டிய தாரகை பவாணி குகப்பிரியா அவர்களிடம் சகோதரி க.கோகிலவாணி அவர்களின் கேள்விக்கான பதிலாய் தன்னுடைய பதிவை இருக்க பற்ற வைத்திருக்கிறார் சகோதரி பவானி குகப்ரியா. அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.


கேள்வி:- பரதக் கலையின் தற்போதைய நிலை குறித்து கூறுங்கள்?

பதில்:- இறைவனை அடைவதற்கு சிறந்ததொரு வழியாகவே கலைகளென்பது உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பரதக் கலையென்பது மிகவும் தூய்மையான கலையாக ஆரம்பக் காலங்களில் காணப்பட்டது. இறைவன் லயித்திருக்கும் இடமான ஆலயத்தில் இறைவனுக்கு முன்பாக ஆடப்பட்டதே இந்தக் கலை. உள்ளத்தில் உறைந்திருக்கும் இறைவனை அடைவதற்காக அன்று தேவனுடைய அடியார்களால் இறைவனின் பாதங்களில் இந்தக் கலை சமர்பிக்கப்பட்டது.

ஆரம்பக்காலத்திலே இருவேறு விதமானவர்கள் இந்தக் கலையை ஆடினார்கள். ஆலயங்களில் இறைவனின் திருவுருவத்திற்கு முன்பாக ஒருசாராரும், தனது வயிற்றுப் பிழைப்பிற்காக இன்னொரு சாராரும் இந்தக் கலையை ஆடினார்கள். கால மாற்றத்திற்கேற்ப இந்தக் கலையிலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

ஆலயங்களில் புனிதம் காத்தவர்களும், வயிற்றுப் பிணியை நோக்க பிழைப்பிற்காக  இந்தக் கலையை கையிலேந்தியவர்களும் ஒன்றாக கலந்துபோக இந்தக் கலை களியாட்டக் கலையாக மாறிப்போனது. இந்தக் கலையின் நோக்கம் பிழைத்துப்போனது.

வெறும் கவர்ச்சிக் கலையாகவும்,  ஆடவர்கள் முன் ஆடும் கலையாகவும் இந்தக் கலையை மாற்றிவிட்டனர். தற்போது எதற்காக பரதத்தை ஆடுகின்றோம் என்ற நியதிகள் இல்லாமலேயே பரதத்தை ஆடுகின்றவர்கள்தான் எம்மில் அதிகம். பரதம் பயிலும் மாணவர்களிடம் பரதம் குறித்து ஒரு கேள்வியை கேட்டாலும் விழி பிதுங்க முழிக்கின்றார்கள்.

எதற்காக இந்தக் கலையை கற்றுக்கொண்டீர்கள் என்று வினவினால் 'எனது அம்மாவிற்கு விருப்பம்,  எனது பெரியம்மாவிற்கு விருப்பம், அதனால் கற்றுக்கொண்டேன்' என்று கூறுகின்றார்கள். பெற்றோர்களோ 'எனது பிள்ளை பரதம் பயில்கின்றாள், அரங்கேற்றம் முடித்து விட்டாள்' என்று சமூகத்துக்கு கூறிக்கொள்வதனூடாக தமது அந்தஸ்தை வெளிப்படுத்துபவர்களாக காணப்படுகின்றார்கள். எனவே அந்தஸ்தை வெளிப்படுத்தவும்,  களியாட்டக் கலையாகவும் இந்த புனிதமான பரதக் கலை மாறிப்போனது. முற்றுமுழுதாக விழுமியங்கள் மழுங்கடிக்கப்பட்ட கலையாக தற்போது எம் முன் இந்த பரதக்கலை விளங்குகின்றது. இது இன்றைய காலகட்டத்தில் பரதத்தின் நிலையாக காணப்படுகின்றது.


கேள்வி :- பரதம் என்பது நம் நாட்டினது பாரம்பரியக் கலையல்ல. அது பாரதத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கலை என்று ஒரு மேடைப் பேச்சில் கூறியிருந்தீர்கள். அப்படியென்றால் நம் நாட்டிற்குரிய கலையெது?

பதில் :- ஒவ்வொரு பிரதேசத்தவர்களும் தமது சமூகத்திற்கு ஏற்ப, தமது கலாசார விழுமியங்களுக்கேற்ப ஒவ்வொரு கலையை உருவாக்கிக்கொண்டார்கள். அந்தக் கலைகள் அந்த பிரதேசத்தின் விழுமியங்களை, கலாசாரங்களை, பண்பாடுகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்தவகையில் பாரதத்தை எடுத்துக்கொண்டால் அங்குள்ள ஒவ்வொரு மாநிலத்தவர்களும் தமக்கென ஒரு கலையை உருவாக்கிக் கொண்டார்கள். தாங்கள் நீண்ட காலமாக பின்பற்றி வந்த சமயம், சடங்கு, கலாசாரம் என்பவற்றை உள்ளடக்கி தமக்கென தனித்துவமான ஒரு கலையை உருவாக்கிக்கொண்டார்கள்.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கேரள மாநிலம்தான். ஏனெனில் கேரளா மாநிலமானது கலையை பாதுகாப்பதிலும், ஒரு கட்டுக்கோப்புடன் அதனை வழங்குவதிலும்,  பல புதிய கலைகளை அறிமுகப்படுத்துவதிலும் பெயர்போன மாநிலமாகும். இந்த மாநிலம்தான் கதகளி, மோகினி ஆட்டம் போன்ற ஆட்டவகைகளை உருவாக்கியது. அண்மையில் கூட 'கூடி ஆட்டம்' என்ற ஓர் ஆட்டவகையை இந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது. உண்மையை கூற வேண்டுமென்றால் ஒரு சிறிய மணற்பரப்பைக் கொண்டதுதான் இந்த மாநிலாம். அவர்களால் இத்தனை கலைகளையும் அவர்களுக்கே உரிய கலாசாரஇ, பண்பாட்டு, விழுமியங்களுடன் அமைத்துக்கொள்ள முடியும் போது ஏன் எம்மால் முடியவில்லை? நமக்கே உரிய தனித்துவமான கலையெங்கே?

எமக்கென்ற நீண்ட பாரம்பரியத்தை கொண்ட கலைதான் இந்த நாட்டுக் கூத்து மரபு. இந்தக் கலைகூட ஆரம்பக் காலகட்டத்தில் பாரதத்திலிருந்து இங்கு எடுத்து வரப்பட்டதுதான். ஆனால் அந்தக்கலையை நம் மூதாதையர்கள் எமக்கே உரிய தனித்துவமான கலையாக வடிவமைத்து எடுத்துக்கொண்டார்கள். அதற்கென ஆட்டமுறைகள், மேடை வடிவமைப்புகள், ஆடையமைப்புகள் என்ற பல அம்சங்களை கொடுத்து அதனை எமக்கே உரிய கலை வடிவமாக அமைத்துக்கொண்டார்கள்.

இதேபோல பரதக் கலையும் அங்கிருந்து கொண்டு வரப்பட்டாலும் அந்தக் கலை இங்கு மிக வேகமாக வளர்ச்சி கண்டது. எனவே இந்த இரு கலைகளையும் அடிநாதமாக வைத்துக்கொண்டு அவை இரண்டிலும் இருந்து ஒரு புதிய கலைவடிவத்தை பிரசவிக்க வேண்டும்.

உண்மையில் பாரதத்தவர்கள் பரத சாஸ்திரம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டுதான் பல ஆட்டவடிவங்களை உருவாக்கியுள்ளனர். எனவே நாமும் நமக்குள்ள வளங்களை பயன்படுத்திக்கொண்டு எமக்கான ஆட்டவடிவத்தை பிரசவிக்க வேண்டும்.


கேள்வி:- இவ்வாறு புதிதாக பிரசவிக்கப்படும் அந்த ஆட்ட வடிவம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்:- நாம் உருவாக்க போகும் அந்த ஆட்ட வடிவமானது எமது தமிழர்களின் சமய, பண்பாட்டு, கலாசார, விழுமியங்களை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கக் கூடியக் கலையாக இருக்கவேண்டும். இந்தக் கலைக்கு பொதுவாக நாம் 'ஈழத்து ஆடல்' எனும் நாமத்தை சூட்டிக்கொள்வோம்.

இலங்கையில் எம் தமிழர்கள் பரந்துபட்டு வாழ்கின்றார்கள். வடக்குத் தமிழர், கிழக்குத் தமிழர், மலையக தமிழர், கொழும்பு தமிழர் என ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழும் எமது இனத்தவர்கள் தமக்கென ஒரு கிராமிய கலை வடிவத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். மலையகத்தில் 'காமன் கூத்து', கிழக்கில் 'தென்மோடி', வடக்கில் 'வடமோடி', மன்னாரில் 'காத்தவராயன் கூத்து'  என ஒவ்வொருவரும் தமக்கான கிராமிய ஆட்ட வகைகளை கொண்டுள்ளனர். 

இவற்றுக்கென ஆட்ட வடிவங்களையும் அவர்களே உருவாக்கியுமுள்ளனர். எனவே இவற்றை பிரதிபலிக்க கூடிய வகையில் நாம் புதிதாக உருவாக்கும் ஆட்டவடிவம் அமையவேண்டும். பரதத்தில் அதிகமாக கர்நாடக இசையையே பயன்படுத்துகின்றார்கள். நாங்கள் அப்படியில்லாமல் முற்றுமுழுதாக தமிழிசையை பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற சிறிய சிறிய விடயங்களில் கூட முற்றுமுழுதாக நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த கோரிக்கை வெற்றியடைய நிச்சயமாக கூட்டு முயற்சியே தேவைப்படுகின்றது.

கேள்வி:- கிராமிய கலையென்பது பொதுவாக இழிவுநிலைக்குட்படுத்தப்பட்ட கலையாகவே சமூகத்தில் பார்க்கப்பட்டு வந்தது. பரதத்தின் வருகையுடன் அந்தக் கலை முற்று முழுதாக வீழ்த்தப்பட்டு போய்விட்டது. ஏன் இவ்வாறான ஒரு நிலை இந்தக் கலைகளுக்கு ஏற்பட்டது?

பதில்:- ஆரம்ப காலம் தொட்டே இந்த கிராமியக் கலைகள் என்பது சாதியத்துடன் பின்னப்பட்டே காணப்பட்டது. கிராமியக் கலைகளில் பாத்திரமேற்கும் வாத்திய கலைஞர்கள் கீழ் சாதி மட்டத்தினரை சேர்ந்தவர்களாகவே காணப்பட்டார்கள். உதாரணத்திற்கு பறையடிப்பவர்கள். 

உயர்சாதியினர் இவ்வாறான பாத்திரங்களை ஏற்றால் அது உயர் சாதிக்கு இழிவை ஏற்படுத்துவதாகவே காணப்பட்டது. காலப்போக்கில் இவ்வாறான இந்த கிராமிய கலைகளில் பாத்திரமேற்பவர்கள் தம்மை சமூகம் இழிவாக கருதி விடும் என்பதற்காகவே தமது உயிர் கலைகளை விட்டுக்கொடுக்க தொடங்கினார்கள். பாடத்திட்டத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட கல்வி முறையில் இவ்வாறான தாழ்த்தப்பட்ட சாதியமைப்பைச் சேர்ந்தவர்கள் தாங்கள் என்னதான் கஷ்டபட்டாலும் தங்களது பிள்ளைகளையாவது பல்கலைகழகத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நோக்கில் அதற்காக உழைக்கத் தொடங்கினார்கள். 

ஒரு பிழைப்பாக இதனை மேற்கொண்டவர்கள் காலப்போக்கில் வருமானம் பற்றாமல் போக முற்றுமுழுதாக இந்தக் கலையை கைவிட்டார்கள். அந்தஸ்துக்குரிய கலையாக சமூகத்தில் மாறிபோன பரதக்கலையை தமது பிள்ளைகளும் பயில வேண்டும் என்று எண்ணத் தொடங்கினார்கள். 'என் மகள் வெளிநாட்டில் சென்று அரங்கேற்றம் முடித்திருக்கிறாள்'; என்று கூறுவதை அவர்கள் பெரும் அந்தஸ்தாக கருதினார்கள். இது கிராமியக் கலைகளுக்கு பெரும் சவாலாக அமைந்துபோனது. சாதிப்பிரச்சினையே இந்தக் கலைகள் அழிவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கேள்வி:- கிராமியக் கலை வடிவங்களான கூத்துக்களை தற்போதைய இளம் சந்ததியினர் ஏன் உள்வாங்கிக்கொள்ள மறுக்கின்றனர்?

பதில்:- உண்மையில் கூத்துக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரியதொரு வரவேற்பை பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வளர்ந்த சமுதாயம் அந்த கிராமிய அளிக்கைகளை சரியான முறையில் அவர்களது கைகளில் ஒப்படைக்க தவறிவிட்டது. ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் தீயது காணப்படுமாயின் அது பெற்றோரின் வளர்ப்பில் தங்கியுள்ளது. பெற்றோர் எதனை வெளிப்படுத்துகின்றார்களோ அதனையே பிள்ளையும் உள்வாங்கும். அதேபோன்றுதான் வளர்ந்த சமுதாயம் எந்தவிதத்தில் கூத்தை இளைஞர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியதோ அதைதான் கூத்துக் குறித்து பிரதிபலிப்பவர்களாக இன்றைய இளம் சமுதாயத்தினர் காணப்படுகின்றனர். 

மற்றுமொரு விடயம் கூத்தில் நிபுணத்துவம் அற்ற கலைஞர்கள் உள்வாங்கப்பட்டிருப்பது. பொதுவாக கூத்தை நெறிப்படுத்தி நடத்தி செல்பவர் மது அருந்திவிட்டு கூத்தை அளிக்கைச் செல்வது,  பொருத்தமற்ற வேஷக் கட்டு போடுவது,  சமூகத்தில் நல்ல ஒழுக்க நெறியை பின்பற்றாதது,  இவை காலங்காலமாக கூத்தை நெறிப்படுத்தியவர்கள் விட்ட பிழைகளாக காணப்படுகின்றன. மீண்டும் மீண்டும் குருமார்கள் செய்த பிழை மாணவர்கள் மத்தியில் தாக்கம் செலுத்த தொடங்கியது. கூத்துக்கு மரியாதை கொடுக்கப்படுவதில்லையென்றால் அங்கு கூத்து முறையாக வழங்கப்படவில்லையென்றே அர்த்தம். 

கேள்வி:- கலைகளை வளர்ப்பதற்கு இதுவரை நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்துக் கூறுங்கள்.

பதில்:- பாடசாலைகளில் கூத்துப்பட்டறைகளை நடத்துகின்றேன். இதில் நல்ல விழுமியங்களை, பண்பாடுகளை அந்த மாணவர்களுக்கு வழங்குகின்றேன். பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். அதனை எதிர்வரும் கலைவிழாவின் போது மேடையேற்றவுள்ளேன். வேலானந்தன் ஆசிரியருடன் இணைந்து வெளிநாட்டில் சென்று செய்வதற்கு எனக்கு ஒரு செயலமர்வு கிடைத்தது. அந்த செயலமர்வில் நமது நாட்டில் காணப்படும் புகழ்பெற்ற தளங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட பாடலுக்கு பரதமும் இல்லாமல் கூத்தும் இல்லாமல் ஒருவகை நடனத்தை மேடையேற்றினேன். கனடாவிற்கு சென்றபோது இந்த நடனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே புதிய நடன வகையை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சி 5 வருடங்களுக்கு முன்பிலிருந்தே நாங்கள் ஆரம்பித்துவிட்டோம். 

(நன்றி : தமிழ் mirror இணைய இதழ் ) நேர்காணல் :- க.கோகிலவாணி
படங்கள் :- குஷான் பதிராஜ

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

நாட்டுப்புறவியலில் நடவுப் பாடல்கள்


 
முன்னுரை
மனித இனம் தோன்றிய அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றிவிட்டன. நாட்டுப்புற வழக்குகள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராயும் இயல் நாட்டுப்புறவியலாகும். மண்ணின் மைந்தர்தம் மனக்கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உயிர் பெற்று உலா வரும் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியங்கள். நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்களையும், பண்பாடுகளையும், நம்பிக்கைகளையும், இலக்கியங்களையும் ஆராயும் இயலே நாட்டுப்புறவியலாகும். ஒரு நாட்டின் வாழ்வையும், வரலாற்றையும், குறையையும், நிறையையும் தெளிவாகக் காட்டுவன நாட்டுப்புற இலக்கியங்கள். மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், பழமையான எண்ணங்கள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டும் கண்ணாடியாகும்.
நாட்டுப்புறவியலை நாட்டுப்புற இலக்கியம், கலை என்ற பிரிவினுள் அடக்குகின்றனர்.

எழுதப்பெற்ற இலக்கியம் "காலம் காட்டும் கண்ணாடி" என்றால் நாட்டுப்புற இலக்கியம் சமுதாயத்தைக் "காட்டும் கண்ணாடி" எனலாம். நாட்டுப்புற இலக்கியம் கிராமப்புற மக்களின் அனுபவங்களை மட்டுமின்றி அவர்களது உணர்வுகளையும் பிரதிபலித்து நிற்கின்றது. நாட்டுப்புற இலக்கியமானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும். நாட்டுப்புற மக்களால் பாடப்படும் பாடல்கள் நாட்டுப்புறப் பாடலாகும். நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நிகழ்வுகள் நாட்டுப்புறப்பாடலின் பொருளாகின்றன.

நாட்டுப்புறப் பாடல்களின் வேறு பெயர்கள்

மக்களின் வாழ்க்கை தாலாட்டுப் பாடலில் தொடங்கி விளையாட்டு, காதல் பாடல்களில் வளர்ந்து, திருமணப் பாடலில் நிறைவெய்தி, ஒப்பாரிப் பாடலில் முடிவடைகின்றது. இன்ப துன்பங்களைப் பற்றி மக்களே பாடுவதால் இதனை மக்கள் இலக்கியம் என்றும் கூறுவர். நாட்டுப்புறப் பாடல்களை இயற்கைப் பாடல்கள் எனலாம். மேலும் இதனை, 1. நாட்டுப்புறப்பாடல் 2. நாடோடிப் பாடல் 3. நாட்டார் பாடல் 4. வாய்மொழிப் பாடல் 5 பாமரர் பாடல் 6 பரம்பரை பாடல் 7. கிராமியப் பாடல் 8. கல்லாதார் பாடல் 9. மக்கள் பாடல் 10. ஏட்டில் எழுதாப் பாடல் 11. மலையருவி 12. காட்டுப்பூக்கள் 13. வனமலர் 14. காற்றிலே மிதந்த கவிதை என்றும் அழைக்கின்றனர்.
இப்பாடல்கள் இலக்கண வரம்பிற்கு உட்படாமலும் இருக்கும். எனவேதான் நாட்டுப்புறப் பாடல்களைத் தாமதமாக மலர்ந்து மணம் வீசும் காட்டு மலருக்கும் மலையினின்று விழும் அருவிக்கும் ஒப்பிடுகின்றனர். இதனை ஒரு சிறகில்லாப் பறவைகள் எனவும் கூறுவர்.

நாட்டுப்புறப் பாடல்களின் வகைகள்

நாட்டுப்புறப் பாடல்களை ஆசிரியர்கள் பல்வேறு வகைகளாக வகைப்படுத்துகின்றனர். அவற்றுள் 1. தாலாட்டுப் பாடல்கள் 2. குழந்தைப் பாடல்கள் 3. காதல் பாடல்கள் 4. தொழில் பாடல்கள் 5. கொண்டாட்டப் பாடல்கள் 6. பக்திப் பாடல்கள் 7. ஒப்பரிப் பாடல்கள் 8. பன்மலர்ப் பாடல்கள் எனப் பலவகைகள் உள்ளன.

நடவுப் பாடல்கள்

தமிழர்கள் உழவுத் தொழிலைத் தொடக்கக் காலம் முதல் செய்து வருகின்றனர். சங்க நூல்களிலும், காப்பியங்களிலும், திருக்குறள்களிலும், உழவுத் தொழில் பற்றிய செய்திகள் நிரம்ப உள்ளன. இன்றைய அறிவியல் உலகில் உழவுத் தொழிலில் பல புதுமைகளும், மாற்றங்களும், நடந்து வருகின்றன. உழவுத் தொழிலில் உழுதல் முதல் விளைந்தவற்றை வீட்டிற்குக் கொண்டுவருவதுவரை எனப் பலதரப்பட்ட தொழிலின் போதும் பாடல்கள் பாடப்படுகின்றன. நடவுப் பாடல்கள் என்பவைப் படிப்பறிவு இல்லாத உழவுத் தொழிலை முதன்மையாகக் கொண்டு வாழும் மக்களால் பாடப்படுகின்றன. நடவுப் பாடல்கள் என்பவைப் பெண்கள் வயல்வெளிகளில் நடவு செய்யும் பொழுது பாடப்படும் பாடல்களாகும். நடவுப் பாடல்களைப் பெண்கள் தனியாகவும் குழுவாகவும் பாடுகின்றனர். இப்பாடல்கள் பெரும்பாலும் பாடுவோரின் குரல் வளத்தால் முதன்மை பெறுகின்றன.

நடவுப் பாடல்களின் உள்ளடக்கம்

நடவுப் பாடல்கள் என்பவை பெண்களால் பாடப்படுவதால் பெண்களின் துன்ப வாழ்க்கையும், அவல நிலையும் இவற்றுள் மிகுதியாக உள்ளன. இவை தவிர இறைமை, சமூகநிலை, அரசியல், கேலி, நாத்தி - மாமி கொடுமை, பெற்றோர் பாசம், அண்ணன் தங்கை உறவு மேன்மை முதலியனவும் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு பாடலும் நெஞ்சை வருடச் செய்யும் காட்கிகளையும் நினைவுகளையும் கண் முன் கொணர்கின்றன. வானொலி தொலைக்காட்சி வழியும் பாடல்கள் பரவுகின்றன.

நடவுப் பாடல்கள் பாடப்படுவதற்குக் காரணம்

நடவுப் பாடல்களைப் பாடுவதற்குக் காரணம் களைப்புத் தெரியாமல் இருப்பதற்கு என்று பலரும் குறிப்பிடுகின்றனர். எனினும் பெரும்பாலான வயல்வெளி உரிமையாளர்கள் பாடக்கூடியவர்களுக்கு ஊதியம் அதிகம் தருவதும் உண்டு. இவ்வூதியம் பணம், நெல், உணவு என ஏதாவது ஒன்றாக இருக்கும். பிற பெண்கள் பாடல்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுவதும் ஒரு காரணம் ஆகும். தங்களின் குரலை வளப்படுத்திக் கொள்ளவும் இப்பாடல் பயிற்சி உதவும்.

நடவுப் பாடல்களில் சமூக நிகழ்வுகள்

1. கணவன்மார் கொடுமை

நடவுப் பாடல்கள் சமூகத்தில் நிலவும் பழக்க வழக்கங்களைப் பதிவு செய்யும் ஆவணம் போல் உள்ளன. குடிகாரக் கணவனின் கொடுமை தாளாமல் ஒரு பெண் அரளி விதையை அரைத்துக் குடித்து இறக்க நினைக்கின்றாள். இதனைப் பாடும் பாடலில் அரளிக் கொட்டையை எவ்வாறு உண்பது என்பதையும் அவ்வாறு உண்டால் அவளின் இறப்பிற்கு பின்பு எத்தகு மருத்துவ ஆய்வுகள் நடக்கும் என்பதையும் ஒரு நடவுப் பாடல் தெரிவிக்கின்றது. இம் மருத்துவ ஆய்வில் அதிகாரிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் இப்பாடல் தெளிவுபடுத்துகின்றது.

"வீட்டிலியே சண்மையாகி னன்னானே னானேன்னனே
போறாளடி ரோட்டுப்பக்கம் னன்னானே னானேன்னனே
அங்கிருந்து போனானே னன்னானே னானேன்னனே
பறிச்சாளாம் அரளிக்கொட்டை னன்னானே னானேன்னனே
அரைச்சாளம் அம்மியிலேயும் னன்னானே னானேன்னனே
காச்சி குடிச்சாளம் னன்னானே னானேன்னனே"

இப்பாடலில் சிற்றூர்ப்புறப் பெண்களின் அவல வாழ்வும் அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களும் காணப்படுகின்றன.

விரும்பிய கணவன் கிடைக்காத நிலையில் தன் சோக வாழ்க்கையின் முடிவை எண்ணி எண்ணி வருந்தும் ஒரு பெண்ணின் நிலையை,

"கோவ இலபறிச்சி - எம்மா
கொறடு வச்ச திண்ணக்கட்டி
குந்துலாம் என்றிருந்தேன்
கொலகாரனா எங்கிருந்தான்" (னன்னானே)
என்ற பாடல் புலப்படுத்துகிறது.
மாமியார்களின் கொடுமை
நடவுப் பாடல்களில் பெரும்பாலும் மாமியார்கள் கொடுமைக்காரர்களாகவே காட்டப்படுகின்றனர். தாய்க்கும் மனைவிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஆடவனின் நிலையையும் ஒரு பாடல் கூறுகின்றது.

"புல்லு நல்லா எம்மா - நல்ல புல்லு - எம்மா நல்ல புல்லு என்
புருசனும் தான் எம்மா - நல்லவரு - எம்மா - நல்லவரு
புருசனதான் எம்மா - பெத்தமாமி - எம்மா - பெத்தமாமி
பேய் குரங்கு எம்மா அலையுறாளே - எம்மா - அலையுறாளே"
இப்பாடலில் தன் கணவனை உயர்வாகவும், மாமியைக் கருங்குறத்தி, பேய் குரங்கு என இழித்தும், பழித்தும், பேசுவதைக் காணலாம்.
வரதட்சணை கேட்கும் மாமியார் குடும்பத்தையும் எண்ணெய் அடுப்பு கொண்டு அச்சுறுத்தும் மாமியையும் நடவுப் பாடலில் காணமுடிகின்றது.

"நூறுவகை சீதனமாம்
நீ எனக்கு எடுத்துவச்ச
பேராசை புடிச்ச கூட்டம் எம்மா - என்ன
பிச்சிப்புடுங்கி எறியுதே எம்மா - எம்மா (னன்னானே)
ஸ்டவ் அடுப்பு முதல் கொண்டு
நீ எனக்கு எடுத்துவச்ச
இங்கு ஒரு ஸ்டுவ் அடுப்பு எம்மா என்
மாமி வாங்கி வச்சிருக்கா எம்மா எம்மா" (னன்னானே)
நாத்திமார்களின் கொடுமை
மருமகள் உறவுடைய பெண்களுக்கு நாத்திகளாலும், அண்ணன் மனைவியர்களாலும் இடையூறுகள் ஏற்படுகின்றன என்று நடவுப் பாடல்களில் காணப்படுகின்றது.

"ஆத்துக்கு அந்தாண்டியும்
அண்ணன் வச்ச தென்னம்புள்ள
ஆறு நெநக்கிலியே - எம்மா
அண்ணன் குர கேக்கலியே எம்மா" - (னன்னானே)
அண்ணன் - தங்கை பாசம்
நடவுப் பாடல்களில் பெரும்பாலும் அண்ணன் தங்கை பாசம் சிறப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

"என்னானே னானேனேன்னே
னானேன்னனே னானேனன்னே
கொண்ட கொண்ட மப்பெறங்கிக்
கொடுக்காமூல மின்னமின்னி (னன்னானே) (குழு)
கொட்டுதடி கோடை மழை
கொல்ல தண்ணி வெளியே போக (னன்னானே) (குழு)
காட்டுயான உழுது வர
கள்ளர்மக்க தென தெளிக்க" (னன்னானே) (குழு)

தாய்ப்பாசம்

இந்த உலகில் எந்தப் பொருள் பெற்றிருந்தாலும் தாய் இல்லையெனில் எந்தப் பயனும் இல்லை. தாயை எண்ணியெண்ணி ஏங்கும் பெண்குரலைப்,
"பட்சிகளே பறவைகளே அம்மம்மா
பட்சடையும் தோப்புகளாம்
பட்சடையும் தோப்புலேயும் அம்மம்மா
பறிச்சி திங்க கனியில்லையோ
பறிச்சி திங்க கனியில்லையா - அம்மம்மா
பாவம் தீக்க அம்மா இல்லயோ" (னன்னானே)

காதல்

நடவுப் பாடல்களில் காதல் செய்திகளும் பாடப்படுகின்றன.
 "அத்த பெத்த சின்னப் பொண்ணே
ஆசை வச்சன் வாமயிலே
கொத்தவரம் கொல்லையிலே
கூட தாமும் பேசிடுவோம்
நன்னே னன்னே னானே னன்னே"

முடிவுரை

நடவுப் பாடல்கள் அடித்தட்டு மக்களின் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதோடு பழந்தமிழ் மக்களின் இசையுணர்வினை அறிந்து கொள்ளவும் பயன்படுகின்றன. வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் நம் மரபுச் செல்வங்கள் அழிந்து விடாமல் காப்பது நம் கடமையாகும்.

நன்றி
வேர்களைத் தேடி

அழியா கிராமியக் கலைகள்

 

நன்றி:சசிகலா - தென்றல் (இணைய பக்கம்) 

http://veesuthendral.blogspot.in/2012/04/blog-post_13.html


கரகாட்டம் ...
தலைமேல் செம்பு சூடி 
கை கொண்டு ஏந்தாமல் 
உடலை வில்லாய் வளைத்து 
ஆடுகின்ற கரகாட்டம் 
ஆரம்ப நாட்களில் 
ஆண்களின் ஆட்டக்கரகமாய் 
துளிர்விட்டு பின்னாளில் 
மங்கையரின் ஆட்டமாகி 
இது வரை அழிவின்றி 
வாழுகின்ற தமிழ்க்கலையாய்...

மயிலாட்டம் ...
மயில் போன்ற முகமூடி 
இடுப்பினிலே தோகைகள்
வான்பார்த்து சிலிர்த்தெழுந்து 
தோகை மயிலாடுதல் போல்
உச்சி முதல் பாதம் வரை 
இரைதேடி ஓடுதல் போல் 
அசைக்கின்ற பொழுதினிலே 
அழகுமயில் நேரினிலே 
ஆடுதல் போல் கம்பீரம் ...

காவடி ஆட்டம் ...
அரைவட்ட வில்லாக வளைத்தெடுத்து 
நடுவிலொரு கம்புகட்டி 
காவடியை அலங்கரித்து 
கவிபாடி ஆடுகின்ற 
காவடி ஆட்டமதை
முருகனின் ஆட்டமென்ற 
முன்னுரையோடு ஆடிடுவர் 
ஆனாலும் 
வழிபாட்டு ஆட்டம் தனி 
கலை ஆட்டம் ஆறு பாகம் ...

பொய்க்காலாட்டம் ...
கொக்கலி ஆட்டமென்ற 
உயரக்கால் ஆட்டத்தில் 
பொய் கால்களைப் பூட்டி 
கொக்கின் கால் போல் 
நீண்ட கட்டையோடு 
ஆறடி உயரம் வரை 
ஆகாயத்தில் நின்றாடும் 
ஆட்டமிது தமிழன் கலை ...

தெருக்கூத்து ....
திருக்கூத்து என்ற கலை 
காலத்தின் பிடியில் சிக்கி 
தெருக்கூத்தாய் நிற்கிறது 
கலைஞ்ரின் வாழ்வாதாரம் போல் 
ஆடல் நாயகன் சிவபெருமான் 
தில்லையில் ஆடியத்   தெருக்கூத்து 
பார்த்தாடியதால் பரவசமாய் 
பாரதக் கூத்தென்ற கதை 
சொல்லும் திரு - தெருக்கூத்து ...
        

சனி, 1 டிசம்பர், 2012

இசைக்கருவி



இசைக்கருவிகளை பற்றிய லேசான தொடு உணர்வை நாம் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக...



தமிழர்களின் ஆத்மார்த்த இசையான பறை இசையை பார்க்க https://www.youtube.com/watch?v=wg1OqIQ29A8



புல்லாங்குழலை பற்றி சிறிய துணுக்குகளை தெரிந்துகொள்ள
https://www.youtube.com/watch?v=TJ2V8rDXMG4



வயலின்  இசைக்கருவியை பற்றிய வரலாற்றை தெரிந்துகொள்ள
https://www.youtube.com/watch?v=SM1rfs2QE4g

வெள்ளி, 30 நவம்பர், 2012

காட்டுமன்னார்குடி


முன்னொரு காலத்தில் வீரநாராயண பெருமாள்புரம் என்றழைக்கப்பட்டமுதலாம் பராந்தக மன்னனால் உருவாக்கப்பட்ட காட்டுமன்னார்குடி கடலூர் மாவட்டத்தின் ஏழு வட்டங்களுள் ஒன்று. இதை தலை நகராக கொண்டு 161 கிராமங்கள் இயங்கி வருகின்றன. வைணவ மக்கள் பெரிதும் மதிக்கும் நாதமுனிகள் அவதரித்த தளம் இது. அதுமட்டுமில்லாது திரு ஆளவந்தார் அவதரித்த தளமும் இதுவாகும். சைவ திருமுறை பாடிய திருமூலர் அவதரித்த தளமும் இதுவேயாகும்.  கல்வெட்டுகளில் வீரநாராயண சதுர்வேத மங்கலம் என குறிப்பிட பட்டிருக்கிறது. பின்னாளில் சாதிய சிந்தனைகளை உடைத்து தூர எறிந்த மாபெரும் தலைவர் சகஜானந்தர் அவதரித்த தளமும் இதுவாகும். தலித் தலைவர் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு குழுவின் முதல் தலைவர் எல் இளையபெருமாள் அவர்களும், சாதிய பிரச்சினைகள் இருப்பினும் அணுகுமுறையால் சிறப்பாக மற்றவர்களிடம் பழகிய எம் ஆர் கே  அவர்களும் இங்கே பிறந்து மக்களுக்கு தொண்டாற்றியிருக்கிறார்கள்.காலபோக்கில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு பல மாறுபாடுகளை பெற்று திகழும் இந்த நகரத்திற்கு சுதந்திர போராட்ட காலத்தில் பல தலைவர்கள் வந்து மக்களிடையே உரைவீச்சாற்றியிருப்பதை பல பக்கங்கள் நினைவுபடுத்துகின்றன. இசுலாமிய மக்களும் கிருத்துவ மக்களும் இந்து பிரிவினர்களும் சிறு சிறு தொய்வுகளையும் தாண்டி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். சிதம்பரத்தில் இருந்து 26 கி.மீ. தூரத்தில், கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலும் நடுவே அமைந்துள்ளது. இதுமட்டுமில்லாமல் இது ஒரு சட்டமன்ற (தனி) தொகுதியாகவும் செயல்பட்டு வருகின்றது. இதன் வடக்குப்புறத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி உள்ளது. காட்டுமன்னார்குடியின் கட்டுபாட்டில் உள்ள கிராமங்கள்.
  1. ஆனந்தகுடி
  2. கொக்கரசன்பேட்டை
  3. மதகளிர்மாணிக்கம்
  4. ஸ்ரீசாத்தமங்கலம்
  5. குணமங்கலம்
  6. மேல்புளியங்குடி
  7. கள்ளிப்பாடி
  8. அய்யன்கீழ்புளியங்குடி
  9. கீழ்புளியங்புடி
  10. ஸ்ரீபுத்தூர்
  11. நகரப்பாடி
  12. ஸ்ரீவக்கரமாரி
  13. ஸ்ரீமுஷ்ணம்
  14. தொராங்குப்பம்
  15. ஸ்ரீஆதிவராகநல்லூர்
  16. தேத்தம்பட்டு
  17. கொழை
  18. சாத்தவட்டம்
  19. ஸ்ரீநெடுஞ்சேரி
  20. கூடலையாத்தூர்
  21. கானூர்
  22. வளச்காடு
  23. குறிஞ்சிக்குடி
  24. பேருர்
  25. காவல்குடி
  26. முடிகண்டநல்லூர்
  27. மழவராயநல்லூர்
  28. குமாரக்குடி
  29. கோதண்டவிளாகம்
  30. நங்குடி
  31. நந்தீஸ்வரமங்கலம்
  32. வட்டத்தூர்
  33. புடையூர்
  34. சோழட்டிரம்
  35. பாளையம்கோட்டை (கீழ்பாதி)
  36. வடக்குப்பாளையம்
  37. பாளையம்கோட்டை (மேல்பாதி)
  38. இராமாபுரம்
  39. கொண்டசமுத்திரம்
  40. மாமங்கலம்
  41. அகரப்புத்தூர்
  42. வானமாதேவி
  43. சுத்தமல்லி
  44. திருசின்னபுரம்
  45. கொல்லிமலை மேல்பாதி
  46. நாட்டார்மங்கலம்
  47. கருணாகரநல்லூர்
  48. பழஞ்சநல்லூர்
  49. வீராணநல்லூர்
    1. உடையார்குடி
  50. மன்னார்குளக்குடி
  51. வடக்கு குளக்குடி
  52. லால்பேட்டை
  53. எள்ளேரி( கி )
  54. எள்ளேரி(மே)
  55. கொல்லிமலை கீழ்பாதி
  56. மாணிய ஆடுர்
  57. நத்தமலை
  58. ராயநல்லூர்
  59. கந்தகுமாரன்
  60. கலியமலை
  61. பூரத்தான்குடி
  62. உத்தமசோழகன்
  63. டி.புத்தூர்
  64. கொத்தங்குடி
  65. லட்சுமிகுடி
  66. செட்டிக்கட்டளை
  67. ஆள்கொண்டநத்தம்
  68. சிவக்கம்
  69. ராதாநல்லூர்
  70. கொத்தவாசல்
  71. மேலநெடும்பூர்
  72. களிகடந்தான்
  73. நெய்வாசல்
  74. தொரக்குழி
  75. சோழக்கூர்
  76. வளத்துர்திருபணியபுரம்
  77. மேல்வன்னியுர்
  78. ஒப்ளாஞ்சிமேடு
  79. கீழ்நெடும்பூர்
  80. பரவிளாகம்
  81. வடமூர்
  82. கூடுவெளி
  83. தெம்மூர்
  84. மெய்யாத்தூர்
  85. கீழ்வன்னியூர்
  86. வானாதராயன் பேட்டை
  87. வீரநத்தம்
  88. சுறாவிழுந்தூர்
  89. கீழ்அதமாங்குடி
  90. வெளவால்தோப்பு
  91. புள்ளையாந்தாங்கல்
  92. நடுத்திட்டு
  93. திருநாரையூர்
  94. சர்வராஜன் பேட்டை
  95. இடையார்
  96. குப்பபிள்ளைசாவடி
  97. திருமூலஸ்தானம்
  98. கோவில்பத்து
  99. கீழராதாமூர்
  100. மேல்ராதாமூர்
  101. ராஜேந்திர சோழகன்
  102. மன்னார்குடி
  103. குருங்குடி
  104. குப்பங்குழிபூவிழந்தூர்
  105. பெரியகோட்டகம்
  106. கீழ்கடம்பூர்
  107. செட்டித்தாங்கல்
  108. வீராநந்தபுரம்
  109. மேல்கடம்பூர்
  110. வேளாம்பூண்டி
  111. தொரப்பு
  112. ஷண்டன்
  113. பலவாய்கிண்டன்
  114. ஈச்சம்பூண்டி
  115. சிறுகாட்டூர்
  116. கஞ்சாங்கொல்லை
  117. ஆச்சாபுரம்
  118. எய்யலூர்
  119. அருமுழிதேவன் (டி)
  120. கீழ்புளியம்பட்டு
  121. ரெட்டியூர்
  122. ஆதனூர் (மன்னார்குடி)
  123. குணவாசல்
  124. மேல்பக்கத்துறை
  125. ஆயங்குடி
  126. குச்சூர்
  127. உமாம்புலியூர்
  128. முட்டம்
  129. மோவூர்
  130. அழிஞ்சிமங்கலம்
  131. கானாட்டாம்புலியூர்
  132. குஞ்சிமேடு
  133. கருப்பேரி
  134. வீரசோழபுரம்
  135. ஆழங்காத்தான்
  136. தொண்டமாநத்தம்
  137. ஓடையூர் (மன்னார்குடி)
  138. மாதர்சூடாமணி
  139. கூத்தூர்
  140. புலியங்குடி (மன்னார்குடி)
  141. மன்னார்குடி (அரசூர்)
  142. வெட்சியூர்
  143. வெண்ணையூர்
  144. கொமராட்சி
  145. கீழ்கரை
  146. நந்திமங்கலம்
  147. அத்திப்பட்டு
  148. தெற்குமாங்குடி
  149. வடக்குமாங்குடி
  150. கருப்பூர்
  151. நளம்புத்தூர்
  152. முள்ளங்குடி
  153. கீழ்பருத்திகுடி
  154. காஞ்சிவாய்
  155. மேல்பருத்திகுடி
  156. இளங்கம்பூர்
  157. வெள்ளுர்
  158. சிதம்பர அரசூர்

வியாழன், 29 நவம்பர், 2012

இசை பற்றிய அரிய வரலாற்றுப் பதிவு

(நன்றி: சா.தேவதாஸ் - கீற்று இணைய இதழ்)



இசையென்று ஒன்றை தெரிவு செய்து அதன் வரலாற்றை நாம் தேர்ந்து கொள்ளத்தான் வேண்டுமென்றால்...இந்த பக்கங்களை படிக்காமல் நிச்சயம் தெரிந்துகொள்ள முடியாது. இன்றுவரை சுப நிகழ்ச்சிகளின்   நாத சுரத்துக்கு எந்த இசைக்கருவி ஈடாக இருக்கமுடியும் என்கிற சந்தேகம் எல்லோருக்கும் உண்டு. எனக்கும்தான்...அந்த வகையில் தமிழிசை என்று வந்தபிறகு ராகங்களை பற்றியும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகி விடுகிறது. அதோடு  சா. தேவதாஸ் அவர்கள் கீற்று இணைய இதழில் எழுதிய இசைப் பற்றிய பதிவை உங்களுக்காக இதை பகிர்கிறேன்.

இந்த நூல் நாகசுர முன்னோடிகளுள் தலைசிறந்தவரான இராஜரத்தினம் பிள்ளை அவர்களைப் பேசுவதுடன், நாகசுரத் தைப் பற்றியும் பேசுகிறது. இராஜரத்தினம் பிள்ளையின் அரிய புகைப்படங்களைச் சேகரித்துத் தந்திருப்பதுடன் முகவீணை, திமிரி நாயனம் என்னும் நாகசுரப் பரிணாமத்திற்கு ஆதாரமாயுள்ள, சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்பங்களையும் புகைப்படங்களாகத் தந்துள்ளது. மறைக்கப்பட்டிருந்த இசை வரலாற்றின் ஒரு பக்கத்தினைப் பதிவு செய்கின்றது.

தமிழக / தென்னிந்திய இசை வரலாறு மிகவும் சிக்கல் நிரம்பியது. தவறான அணுகுமுறையில் தப்பும் தவறுகளும் மிகுந்தது. திருகல் முருகலானது. அடிப்படை ராகங்கள் 72, இல்லை 32தான் என்பதிலிருந்து எதிரும் புதிருமான நிலைபாடுகள் கொண்டது. இவற்றுடன், பேசப்படாது மௌனம் சாதித்த நிலையும் உண்டு.

குறிப்பாக, இசை வேளாளர்களின் பங்கு தென்னிந்திய இசை வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும். அவர்கள் பேணிக் காத்த சின்ன மேளம் என்னும் பரதம் மேட்டுக்குடி யினரால் எடுக்கப்படும்; ஆனால் தேவதாசி முறை ஒழிப்பில் இசைவேளாளரும் ஒழிக்கப்படுவதற்கான முயற்சி தொடங்கும். பெரிய மேளம் என்னும் நாகசுரம் பிற வகுப்பாரால் தீண்டப்படாது ஒதுக்கியே வைக்கப்படும் இன்று வரையும். அபூர்வமாக ஒரு சின்ன மௌலானாவும் திருவிழா ஜெயசங்கரும் தென்படுவார்கள்.

இதில் சுவையானது, இது பற்றி ராஜாஜியும் பேசியிருப்பதுதான். காரணகர்த்தாவே விளைவு குறித்து நொந்துபோவது மிகமிக சுவைமுரண் கொண்டதல்லவா! ""மிக உயர்வான இக்கலை நம்நாட்டில் ஒரே ஒரு சாராரால் மட்டுமே கையாளப்படுவதை உணரும்போது மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது. விரைவில் இந்த வாத்தியத்தை எல்லா வகுப்பினருமே நன்கு கற்றுத் தேற வேண்டும்...” (பக். 104).

நாகசுரத்தின் இன்றைய வடிவமைப்புக்கும் கீர்த்திக்கும், காருகுறிச்சி அருணாசலம் என்னும் கலைஞன் உருவாக்கத் திற்கும் அடிப்படையாக இருந்த இராஜரத்தினம் எப்போதும் போற்றிய கலைஞர்கள் - நாகசுரத்தில் - பக்கிரி நாயனக்காரர், மன்னார்குடி சாரநாத நாயனக்காரர் மற்றும் திருச்சேறை முத்துகிருஷ்ணன். அதுபோலவே, வீணை தனம்மாள், எஸ்.ஜி. கிட்டப்பா, மணிக்கொடி எழுத்தாளர்கள் முதலானவர்களிடம் அவர் நெருக்கமாக இருந்திருக்கிறார். கலைஞனின் கர்வத் துடனும் உற்சாகத்துடனும் உல்லாசத்துடனும் வாழ்ந்திருக்கிறார்.

கேலி கிண்டலுடன் சந்திப்புகளைக் கலகலப்பாக்கி இருக்கிறார். எது எப்படி இருப்பினும், இசை என்று வரும்போது, இறுதி மூச்சு வரையும் விடாத சாதகமும், முழுமையான அர்ப்பணிப்பும் கொண்டு, புதுப்புது உருவங்களில் ராகங்களை இழைத்திடுவதில் மட்டும் விட்டுக்கொடுத்தல் கிடையாது.

செம்பொன்னார் கோயில் ராமசாமிப்பிள்ளை, மதுரை பொன்னுசாமி நாயனக்காரர், மன்னார்குடி பக்கிரியா பிள்ளை போன்றோரின் இசை கேட்டு, உத்வேகம் கொண்டு, அவற்றை அப்படியே திருப்பித் தந்துவிடாமல், தன் மனோதர்மப்படி ராகங்களைப் படைத்திருப்பது ராஜரத்தினத்தின் தனிச்சிறப்பாகும். வாய்ப்பாட்டில் அவர் பெற்றிருந்த பயிற்சி இதற்குப் பெரிதும் துணை புரிந்துள்ளது. வீணை தனம்மாளின் வீணை இசையிலிருந்து இசை நுட்பங்களை உள்வாங்கிக்கொண்ட அவர், "எனது கடைசியான குரு ஸ்ரீமதி வீணை தனம்மாள்” என்று குறிப்பிட் டுள்ளார். ராஜரத்தினத்தின் குரலை "ஒரு சங்கிலிருந்து வெளிவரும் நாதம் போல் ஒலிக்கிறதுஃ என்கிறார் எழுத்தாளர் கு. அழகிரிசாமி.

"நாதசுரம்” என்னும் பெயர் இன்றைய வழக்கு. "நாகசுரம்” என்பதே "நாதசுர’மாகியுள்ளது. "நாகசுரம்” என்பது "நாகசாரம்” என்பதனின்றும் பிறந்தது. இதில் "நாக’ என்பது ஏன் இடம் பெற்றது? நாகர்கள் (பழங்குடியினர்) பயின்ற கருவி என்னும் பொருளில் "நாக சின்னம்” "நாகசாரம்” என்னும் வழக்குகள் வந்தன என்கிறார் ஆசிரியர் (பக்.7). "நாக’ என்பது வேறு பொருள்களிலும் வழங்கியுள்ளதை தமிழ்ப் பேரகராதியில் காணமுடிகின்றது. "நாகசம்பங்கி’ என்பதில் "நாகஃ என்பது சிறு இலைகளைக் குறிக்கின்றது; "நாககேசரம்” என்றால் சிறுநாகப்பூ. இன்னொரு பொருளமைதி: "நாகம்” என்பது ஒரு குறிஞ்சிப் பண்ணைக் குறிக்கின்றது; "நாகணவாய்ப் புள்” என்றால் மைனா.

"நாக செண்பகம்” என்பதற்கு ‘common yellow trumpet flowered tree’ என்று விளக்கம் தரப்படுகிறது. இந்த உதாரணங்கள் மற்றும் விளக்கங்களிலிருந்து, நாகம் - நாக என்னும் சொல் முன்னொட்டுக்கு சிறிய-குறுகிய- இசை தொடர்பானது என்னும் பொருள்கள் உண்டென்று அறியலாம். ஆதலின் "நாகர்கள்” என்பதிலிருந்து பிறந்தது என்பதை விடவும், மேற்கொண்ட பொருளமைதி கொண்ட முன்னொட்டாகவே இடம்பெற்றுள்ளது என்பது பொருத்தமாக அமையும்.

"இசைக்கருவிகளால் புகழடைந்தவர் சிலர். வயலின் சவுடய்யா, புல்லாங்குழல் மாலி. ஆனால் இராசரத்தினம் பிள்ளையால் புகழ் அடைந்தது நாகசுரம்” என்று முன்னுரையில் எழுதுகிறார் நா. மம்மது. ஏற்கனவே வீணை தனம்மாள் பற்றியும் கே.பி. சுந்தராம்பாள் பற்றியும் நூல்கள் எழுதியுள்ள திரு. ப. சோழ நாடனின் இன்னொரு வரலாற்றுப் பதிவு இந்த நூலாகும். முக்கிய மான நாகசுர மற்றும் தவில் கலைஞர்களது பட்டியலுடன் வெளி வந்துள்ள இந்நூல், ஒவ்வொரு நூலகத்திலும் மட்டுமல்லாமல், ஒவ்வொரு வாசகனிடத்தும் இருக்கவேண்டிய ஒரு பிரதியாகும்.

நாகசுர சக்ரவர்த்தி திருவாடுதுறை டி.என். இராஜரத்தினம்பிள்ளை வரலாறு, ப. சோழநாடன், நிழல், 2005, பக். 120, விலை. ரூ.60.

எழுத்தாளர் எஸ். பாலபாரதி சொல்லும் கும்மி

எழுத்தாளர் எஸ். பாலபாரதி அவர்கள் கும்மியின் சுவடுகளை நம்முன் எடுத்து வைப்பதை நான் உணர்ந்த வாறே நீங்களும் உணர வேண்டும் என்கிற முனைப்போடு அண்ணாரின் பதிவை உங்களுக்கும் பகிர்கிறேன். மத்திய தர மக்களின் மன நிலையை படம் பிடிக்கிறார். காலத்தால் அழிக்கமுடியாத கிராமிய கலைகளை நாமே மேற்க்கத்திய மோகத்தால் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து எப்போது திருந்துவது?


(நன்றி: எஸ்.பாலபாரதி)

“கும்மி” என்ற சொல்லாடலை நாம் இழிவு படுத்துகிறோமா?

னிய நண்பரும் சகபதிவருமான இவான் ”பதிவர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ‘கும்மி’ என்ற சொல்லாடலும் அதன் தாக்கங்களும்” என்ற பதிவினை எழுதி இருக்கிறார். அதில் கும்மி என்ற சொல்லாடலை நாம் ஒன்றுக்கும் உதவாது என்ற முடிவுக்கு வந்து, அதன் காரணமாகவே பயன்படுத்துவதாகவும், அழிந்து வரும் கலைகளில் கும்மியும் இருப்பதால் அதன் மீது மோசமான ஒரு பிம்பம் எழுவதற்கு நாம் காரணமாகி விடக்கூடாது என்றெல்லாம் எழுதி இருக்கிறார்.

அப்படி எல்லாம் எந்தவொரு உள்நோக்கமும் இன்றியே இன்று வரை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உண்மையில் கும்மி  என்பது  தமிழ்ச்சாமிகள்  சார்ந்து  ஆடப்படும்  ஒரு ஆட்டமாக இன்றும்  தென் மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முளைப்பாரி வளர்த்து ஒரு வாரம் நடக்கும் நிகழ்ச்சியில் ஆண்கள் ஒயில் ஆட, பெண்கள் குழு கும்மி அடித்து ஆடும். இதில் வயது பாகுபாடெல்லாம் கிடையாது. என் அம்மாச்சியும் ஆடியிருக்கிறாள்கூடவே, என் அம்மாவும். இவர்கள் இருவருடனும் என் அக்காவும் ஆடி இருக்கிறாள். இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் எதுவெனில்.. இந்த ஒயில், கும்மியாட்டம் என்பது மத்தியதர, கடைநிலை சாதியர்களின் ஆட்டமாகவே இருந்து வந்திருக்கிறது.

 எந்தவொரு உயர்சாதியினரும் இந்த ஆட்டத்தை ஆடுவதில்லை. உழைக்கும் மக்களின் களைப்பு தீர ஆடிப்படும் நிகழ்வாகவே இதனை பார்ப்பதும் உண்டு. திருவிழா அல்லாத சமயங்களில் வெறும் பெண்களின் களைப்பு நிவர்த்தி பாடலுடன் நின்று போகும். ஆண்கள் வஸ்தாவியின் ஒயில் வகுப்புக்கு போவதை வழக்கமாக இன்றும் பல பகுதிகளில் கொண்டுள்ளனர். (என்னுடைய ”கோட்டி முத்து” கதையில் இது பற்றி எழுதிய நினைவு இருக்கிறது.)

ஆண்களின் ஓயில் ஆட்டத்தை விட, பெண்களின் கும்மியாட்டம் அதிக பார்வையாளர்களை கொண்டதாகவும், சுவையான இசை வடிவமாகவும் இருந்து வந்துள்ளது. பெண்களின் ஆட்டத்தை காண கூடும் கூட்டத்தினால் வெறுப்புற்ற ஆண்வர்க்கம். ஒரு உத்தியை கையாண்டது. ஒயில் பக்கம் அதிக பார்வையாளர்களை திருப்புவதற்கு ஒரு குழுக்களிடையே போட்டிகள் வைத்து, கிராம அளவில் அதை வணிகப்படுத்தியது. சின்ன சின்ன ஸ்பான்சர்களைப் பிடித்து, ஒயில் போட்டியினை நடத்தத்தொடங்கியது. ஒயிலை வணிகப்படுத்தும் வேலைகள் வெற்றியடைந்தபின் தான் கும்மியின் பக்கம் பார்வையாளர்கள் கூட்டம் குறையத்தொடங்கியது என்பது உண்மை.

”ஆனை வாரதப் பாருங்கடி- அது
அசைச்சு வாரத்தப்பாருங்கடி..” என்ற பிரபலமான கும்மிப் பாடலே இளையராஜாவால் சினிமாவுக்கு கடத்திவரப்பட்டு,
“ஆயிரம் தாமரை மொட்டுக்களே- வந்து
ஆனந்த கும்மி தட்டுங்களேன்” என்று உருமாற்றமாகி, பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. (கிராமிய இசை வடிவங்களில் இருந்து சினிமாக்காரர்கள் களவாடிய மெட்டுக்கள் குறித்து தனி புத்தகமே போடலாம்)

என் அம்மாச்சி தொடங்கி என் அக்காள் வரை ஆடிய கும்மியை மீட்டு எடுத்து, மீண்டும் ஆடவைக்க முடியாவிட்டாலும்…, நினைவிலாவது இந்த பெயரை வைத்திருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கமின்றி வேறு எந்தவொரு நோக்கமும் இல்லை என்று நிச்சயமாக நம்பலாம்.
நீங்கள் குறிப்பிட்டது போல கும்மி ஆட்டம் என்பது ஒன்றுக்கும் உதவாதது என்று ஆண்களாலும், உயர்சாதியினத்தவராலும் பரப்பப்பட்ட பொய்யன்றி வேறெதுமில்லை என்பதையும் உணர்க!

சகஜானந்தர்

மூடர்களின் சாதிய சிந்தனையில்லாமல் தென்னார்க்காடு வள்ளலார் மாவட்டத்தில் பிறந்த எவரும் சுவாமி சகஜானந்தர் குறித்து அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில், சகஜானந்தர் குறித்த செய்திகளை சுருக்கமாக பதிக்கிறோம். இந்த செய்திகளை மின் இதழில் எழுதியமைக்காக ம.வெங்கடேசன் அவர்களுக்கு எங்கள் நன்றியை பதிவு செய்கிறோம். அந்த கட்டுரையை அப்படியே மாற்றமில்லாமல் உங்களுக்கும் தருகிறோம்.


சுவாமி அயோத்தி தாச பண்டிதர் குறித்து  ஜெயமோகன் & மற்ற பலர் எழுதியுள்ளார்கள்.

எப்போதுமே தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றம், இந்து சமய வளர்ச்சி ஆகியவைகளை தம் வாழ்நாள் முழுவதும் குறிக்கோளாக கொண்டு அதற்காக செயலாற்றிய ஒருவரை சுட்டிக்காட்ட முடியுமென்றால் நாம் சுவாமி சகஜானந்தரை மட்டுமே காட்ட முடியும். தாழ்த்தப் பட்டவர்களிடையே ஆன்மீக ஞானிகள் உருவாக முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர். தாழ்த்தப் பட்டவர்கள் இந்துக்கள் அல்ல என்று உயர்சாதி இந்துக்களும் வெள்ளையர்களும் தாழ்த்தப் பட்டவர்களின் மனதில் பதியும் அளவுக்கு பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையிலும் கூட தாழ்த்தப் பட்டவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபித்து அதை தாழ்த்தப் பட்டவர்களிடையே பிரச்சாரமும் செய்தவர் நமது சுவாமிஜி. அவருடைய வாழ்க்கையிலிருந்து நிறைய செய்திகளை நாம் கற்றுக் கொள்வதற்கு இருக்கிறது.

தாழ்த்தப் பட்டவர்களுக்கு கிறிஸ்தவம் கல்வி கொடுத்து முன்னேற்றியது என்ற பிரச்சாரம் சகஜானந்தர் வாழ்வில் பொய்யாகிப் போனது. அவர்கள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு கல்வி வழங்கியதற்கான காரணம் சகஜானந்தரின் வாழ்வின் மூலம் உலகுக்கு வெளிப்பட்டது. அமெரிக்கன் ஆர்க்காடு சமயப் பரப்பாளர் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய அவர் அங்கு தீண்டாமையின் கோர முகத்தை கண்டார். மாணவர்களை வேற்றுமைப் படுத்தி பார்க்கும் கிறிஸ்தவர்களின் போக்கினை உணர்ந்தார். ஆயினும் தன் கல்வியில் கவனம் செலுத்தினார்.

பின்பு உயர்நிலைக் கல்வி பயில திண்டிவனத்தில் இருந்த அமெரிக்கன் கிறிஸ்தவ பள்ளியில் 1901ல் சேர்ந்தார். சகஜானந்தர் அப்பள்ளியில் பைபிளை ஒப்பிப்பதில் கிறிஸ்தவ மாணவர்களை விட அதிக ஆற்றல் பெற்றிருந்தார். இதனால் கவரப்பட்ட பாதிரிகள் அவரை கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுமாறும் கிறிஸ்துவத்தை தழுவுமாறும் அவரை வற்புறுத்தினர். அவர் ஏற்க மறுத்துவிட்டார். அப்போதுதான் கிறிஸ்தவர்கள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு கல்வி கொடுப்பது எதற்காக என்பது வெட்ட வெளிச்சமாகியது. கிறிஸ்தவ மதத்தில் சேர மறுத்ததால் அவருக்காக கிறிஸ்தவ பள்ளி 1903ஆம் ஆண்டில் செலவு செய்த தொகையை திருப்பிக் கேட்டது. மேலும் அவர் விடுதியில் தங்கிப் படித்த தால் அறை மற்றும் உணவு தொகையென 60 ரூபாயை அவரது தந்தையிடம் வசூலித்தனர்.

இதனால் பள்ளியில் இருந்து விலகிவிட்ட சகஜானந்தர் தன் பெற்றோருடன் வேலை தேடி கர்நாடகத்திலுள்ள கோலார் தங்கவயலுக்கு சென்றார். அங்கு அவரின் ஆன்மீகத் தேடல் அதிகமாகியது. ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டும் பல ஆன்மிக நூல்களையும் பயின்றும் பல ஞானிகளிடம் கற்றும் தன்னுடைய ஆன்மிக அறிவையும் வேட்கையையும் அதிகப்படுத்திக் கொண்டார். திருமண எண்ணத்திலிருந்து அவர் மனம் விலகியது. 1907ம் ஆண்டு தன்னுடைய 17ம் வயதில் துறவு நிலையை மேற்கொண்டார்.

சென்னை வியாசர்பாடியில் இருந்த கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளிடம் சென்று ஆன்மிகக் கல்வி கற்றார். இவர் பெற்றருந்த ஆன்மிக அறிவு, இறை உணர்வைக் கண்டு சிவப்பிரகாச சுவாமிகளே முனுசாமி என்ற இவரின் இயற்பெயரை சகஜானந்தம் என்று மாற்றி அழைத்தார்.
தேசப்பற்றாளர் வ.உ.சியிடம் திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியங்களைக் கற்றார். விசார சாகரம், மெய்கண்ட சாத்திரம், ஆதி ரகசியம், அஷ்ட பிரபந்தம், திருவெண்பா, கைவல்யநவநீதம் மற்றும் கம்பராமாயணம் போன்ற நூல்களை ஆழமாகப் படித்தார். சீரங்கம் சென்று பிரதிவாதி பயங்கரம் சீனிவாசாச்சாரியரிடம் சம்ஸ்கிருதம் பயின்றார். அதன் பிறகு ஞான வாசிஷ்டம், பகவத்கீதை, வால்மீகி இராமாயணம் மற்றும் பல சமஸ்கிருத நூல்களைக் கற்று தேர்ந்தார்.

1910ல் சென்னை மண்ணடியில் வாழ்ந்த ஆ.முருகேசப் பிள்ளை என்பவருடன் சிதம்பரம் வந்து சேர்ந்தார். 1916ல் அங்கு நந்தனார் மடமும் நந்தனார் கல்விக் கழகமும் தாழ்த்தப் பட்டவர்களின் கல்விக்காக ஆரம்பித்தார். மடமும் கல்விக் கழகமும் ஆரம்பிக்க பல்வேறு சமுதாய மக்கள் உதவினர். 6 சென்ட் இடமுள்ள மடம் மற்றும் 24 சென்ட் சுற்றியுள்ள நிலத்தைப் பெற வி.இராமசாமி ஐயர், இராமகிருஷ்ணப் பிள்ளை, திவான் பகதூர் கேசவப் பிள்ளை, டாக்டர் நஞ்சுண்ட ராவ், சி.ஆர்.துரைசாமி முதலியார், திவான் பகதூர் சுப்புராயலு ரெட்டியார், தாசில்தார் இராமசாமிப் பிள்ளை முதலியோர் உதவினர்.

1916ல் தாழ்த்தப் பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட நந்தனார் பாடசாலை பிரம்மஸ்ரீ என்.கோபாலசாமி ஐயங்கார் அவர்களால் திறக்கப்பட்டு முதன் முதலில் 20-5-1917ல் தண்டேஸ்வர நல்லூர் மாரிமுத்து என்பவரை ஆசிரியராக கொண்டு முதலில் 25 பிள்ளைகளோடு நடைபெற ஆரம்பித்தது.
மடாலயம், பாடசாலை, சத்திரம் முதலியவற்றின் போஷகர்களாக திவான்பகதூர் ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர், அட்வோகேட் ஜெனரல் எஸ்.சீனிவாச ஐயங்கார், சென்னை சுதேசமித்திரன் பத்திராபதிபர் ஏ.ரங்கசாமி ஐயங்கார், திவான்பகதூர் பி.கேசவப்பிள்ளை, டாக்டர் எம்.சி.நஞ்சுண்டராவ், சி.ஆர்.துரைசாமி முதலியார், ஐகோர்ட் வக்கீல், சிதம்பரம் பிளீடர் இராமசாமி ஐயர், சிதம்பரம் தாலுக்கா போர்ட் பிரசிடென்ட்டும் முனிசிபல் சேர்மனும் கவுன்சிலருமான கே.வராகாச்சாரியர் முதலானோர் இருந்து வந்தனர்.

பாடசாலை கட்டிமுடிக்க 1918ல் அஸ்திவாரக் கல் திவான்பகதூர் ஜஸ்டிஸ் டி.சதாசிவ ஐயர் அவர்களால் நாட்டப் பட்டது. பாடசாலைக்கு என நிதி கொடுப்பவர்கள் தன்னுடைய விலாசத்திற்கோ அல்லது சுதேச மித்திரன் பத்திராபதிபர் ரங்கசயாமி ஐயங்கார் அவர்களுக்கோ அனுப்பினால் அவர்கள் உடனே எங்களுக்கனுப்பி விட்டு பத்திரிகையிலும் பிரசுரம் செய்வார்கள் என்ற விளம்பர அறிக்கை சுவாமி சகஜானந்தரால் கொடுக்கப்பட்டது.
1919ல் ராஜாஜி சிதம்பரத்திற்கு வருகைபுரிந்தார். சுவாமி சகஜானந்தர் அவரை நேரில் சந்தித்து மடமும், நந்தனார் பள்ளியும் தொடங்கப்பட்டதன் உண்மைக் காரணத்தை விளக்கினார். நிதி நெருக்கடியையும், இடத்தின் பற்றாக்குறையையும் விளக்கினார். சுவாமிகளின் பொதுப்பணியைப் புரிந்துகொண்ட ராஜாஜி நந்தனார் மடத்தின் மேம்பாட்டிற்குரிய நிலத்தை அரசு வழங்க வேண்டுமெனத் தென்னாற்காடு மாவட்ட கலெக்டருக்குக் கடிதம் எழுதினார். இதன் மூலம் 52 ஏக்கர் புறம்போக்கு நிலம் கொடுக்கப்பட்டது.

மேலும் இலங்கை, பர்மா, இரங்கூன், மலேசியா, சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களிடம் உரையாற்றி கழகத்திற்கென நிதியைப் பெற்றார். இந்த உழைப்பின் காரணமாக 1927ல் உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. மேலும் கல்விக் கழகம் வளர வேண்டும் என்பதற்காக 1939ல் அரசே நேரடியாக நடத்த வேண்டுமென சுவாமிகள் கேட்டுக் கொண்டார். அவரின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு அவரின் தலைமையிலேயே தொடர்ந்து நடத்திவர அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது.
பள்ளியில் கடுமையான ஒழுக்க விதிகள் கடைபிடிக்கப்பட்டன. மாணவர்கள் காலையில் நீதி போதனை வகுப்பில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும். கட்டாயம் மாணவர்கள் விபூதி அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தேவாரம் முதலிய பாடல்கள் போதிக்க ப்பட்டன. பள்ளிகளில், விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் சைவ உணவையே சாப்பிட வேண்டும் என்று போதித்து வந்தார். இதனை மாணவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். நந்தனார் விடுதியில் எப்போதும் சைவ உணவுதான் பரிமாறப் பட்டது.

அரசாங்கம் நந்தனார் பள்ளியையும் விடுதியையும் எடுத்துக்கொண்ட போதிலும் சுவாமிஜியின் கருத்துப்படி சைவை உணவையே வழங்கிட சம்மதித்தது. இதை எழுத்துப் பூர்வமாகவே சுவாமிஜி எழுதி வாங்கிக் கொண்டார். எட்டாம் வகுப்பை தாண்டாத சுவாமிகள் தமிழ் இலக்கியத்திலும், இலக்கணத்திலும், வடமொழியிலும் மிக்க புலமை பெற்றிருந்தார். வ.உ.சியின் சீடராக இருந்த சுவாமி பின்னாளில் வ.உ.சி.எழுதிய நூல்களான அகமே புறம், மெய் அறம் போன்றவற்றிற்குச் சிறப்புப்பாயிரம் எழுதியுள்ளது அவரின் புலமைக்கான சான்றாகும்.

அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ்ப் புலவர்களில் ஒருவராக கருதப்பட்டார். 1940ல் அண்ணாமலை பல்கலைக் கழகம் அவரை தமிழறிஞர் என்று போற்றி பாராட்டி, அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் அறிஞர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டது. 1960ல் திருநெல்வேலியில் இருந்து கழக வெளியீடாக வெளிவந்த ‘தமிழ்ப்புலவர் வரிசை’ எனும் நூலில் இருபது தமிழ்ப் புலவர்களை அவர்களின் படைப்பாற்றல் கொண்டு வரிசைப்படுத்தி உள்ளனர். இதில் எட்டாவது இடத்தில் சகஜானந்தரின் பெயர் இடம் பெற்றுள்ளது அவரின் தமிழ்ப்புலமைக்கான சான்றாகும்.


சுவாமி சகஜானந்தர் அப்போதைய அரசியலின் தேவையைக் கருதி அரசியலில் நுழைந்தார். அன்று தமிழகத்தில் தாழ்த்தப் பட்டவர்களுக்கென இயங்கிக் கொண்டிருந்த அனைத்திந்திய ஆதிதிராவிடர் மகாஜன சபாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்த சபாவின் சார்பாக 1926 முதல் 1932வரை சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பிராக இருந்தார். பின்பு காங்கிரஸ் கட்சியில் உறுப்பிராகி 1936-37லிருந்து 1959 வரை சிதம்பரம் தனித் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டார். அரசியல் களத்தில் காந்தியடிகள், ராஜாஜி போன்றோரின் அன்பையும் பாராட்டையும் பெற்றிருந்தார். தான் காங்கிரசில் சார்ந்துள்ள போதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏதாவது தீமை காங்கிரசால் ஏற்பட்ட போது அதை கடுமையாக விமர்சித்தும் இருக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்களே
சகஜானந்தர் தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களே என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களை ‘ஆதி திராவிடர்’ எனக்கூறாமல் ‘ஆதி இந்துக்கள்’ என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று கோரியவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்து மதத்தை மேற்கொண்டவர்களெனக் கருதப் படுவதால் அவர்களும் இந்துக்களே என்று கூறி சகஜானந்தர் தேவஸ்தான கமிட்டிகளில் தாழ்த்தப் பட்டவர்களையும் நியமிக்க வேண்டும் என்று குரலெழுப்பினார்.

(சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்புத் தொகுதி எண்VII, 1947, அக்டோபர் 29, பக் 61-62) திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் விஷயமாக ஒரு சட்டம் கொண்டுவரப் பட்டது. அப்போது சகஜானந்தர் தாழ்த்தப் பட்டவர்களுக்கு தேவஸ்தான கமிட்டிகளிலும், நிர்வாக கமிட்டியிலும் இடம் ஒதுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மேலும் சாதாரணமாக இந்து என்னும் பேதமிருப்பது போதாது. தாழ்த்தப் பட்டவர்களும் இந்துக்கள் என்றிருத்தல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். (ஏனென்றால் அக்காலகட்டத்தில் இந்து என்பதில் தாழ்த்தப் பட்டவர்கள் இல்லை, உயர்த்தப் பட்ட சாதியினர் மட்டுமே இந்து என்று வரையறுத்து வைத்திருந்தனர் வெள்ளையர்களும் உயர்த்தப் பட்ட சாதியினரும்).

1934ல் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தினார். சாதிவெறி பிடித்தவர்கள் சகஜானந்தரைத் தாக்கினர். அது பெருங்கலகத்தில் முடிந்தது. தொடர்ந்து பிரச்சாரம், போராட்டங்களின் விளைவாக 1947 ஜூன் மாதம் 2ம் நாள் சகஜானந்தர் கோயில் நுழைவு போராட்டத்தில் வெற்றி பெற்றார். நூற்றுக் கணக்கான தாழ்த்தப் பட்டவர்களுடன் கோயிலில் நுழைந்து இறைவனை வழிபட்டு நாங்களும் இந்துக்கள்தான், எங்களுக்கும் இந்த கோயிலில் நுழைய அனுமதி உண்டு என்பதை பறைசாற்றினார்.

1938ல் கொண்டு வரப்பட்ட மலபார் கோயில் நுழைவு மசோதாவில் கலந்து கொண்டு பேசும் போது, ”தாழ்த்தப் பட்டவர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது என்று எந்த வேதமும் சாஸ்திரமும் சொல்லவில்லை, சில மடாதிபதிகள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். மற்ற சமூகத்தவர்களை விட தாழ்த்தப் பட்டவர்களுக்கே கோயிலுக்குள் நுழையும் உரிமை அதிகமாக இருக்கிறது. கோயிலில் சுவாமி இருக்கிறது என்றும் எங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. எங்களை உள்ளே போக விடாமல் வைத்திருப்பதால் வாஸ்தவத்தில் இந்து மதத்தில் ஏன் மக்களாகப் பிறந்தோம் என்று துக்கம் அடைந்து வருகிறோம். சீக்கிரம் இதைச் சட்டமாகச் செய்து நடைமுறையில் வந்தால் அது எங்களுக்கு ரொம்பவும் சந்தோஷத்தைக் கொடுக்கும்” என்று பேசினார்.

ஒவ்வொரு ஆண்டும் சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்களின்போது தில்லை நடராசர் தேரில் பவனி வருவது வழக்கம். அப்போது தாழ்த்தப் பட்டவர்களுக்கு அனுமதியில்லை என்னும் நிலை இருந்தது. இதைப் பார்த்த சகஜானந்தம் அதைப் போலவே ஒரு நடராசர் தரிசனத்தை தாழ்த்தப் பட்டவர்களைக் கொண்டே நடத்தினார். நந்தனார் மடம் மற்றும் கல்விக் கழக சீடர்களுடன் பெரிய இசைக்குழுவை உருவாக்கி அவர்களை தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை இசையுடன் பாடி மகிழ்ந்திடச் செய்தார். இது அரிதினும் அரிதான, மறக்க முடியாத, மிகவும் அனுபவித்து சுவைக்க கூடிய ஒரு நடராசர் தரிசனமாக தாழ்த்தப் பட்டவர்களுக்கு அமைந்தது. தாழ்த்தப் பட்டவர்களின் மனதில் தாங்களும் இந்துக்கள் என்பதை இவ்வாறு ஆழமாகப் பதியச் செய்தார்.

நந்தனார் மடத்தில் தமிழ் மாதம் மார்கழியில் திருப்பவை, திருவெம்பாவை மாநாட்டில் வழக்கமாக கருத்துரைகளையும் கருத்தாடல்களையும் ஏற்பாடு செய்து மக்களுக்கு அக்கருத்துக்களை பதிய வைப்பார். திருப்பவை, திருவெம்பாவை, நாலாயிர திவ்விய பிரபந்தம், இராமாயணம் ஆகியவற்றிலிருந்து உரையாற்றிட அறிஞர்கள் விற்பன்னர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்களை கொண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார். ஒவ்வொரு ஆண்டும் இந்து சமயம் சார்ந்த எல்லா விழாக்களையும் மிகுந்த பிரயாசையோடும் பக்திச்சுவை செறியும் வனப்போடும் நந்தனார் மடத்தில் நடத்திக் காட்டுவார். இவை எல்லாமே தாழ்த்தப் பட்டவர்களும் இந்துக்களே என்பதை தாழ்த்தப் பட்டவர்களும் மற்றவர்களும் உணரவேண்டும் என்பதற்காகத் தான்.

அரசியல் களத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய கூட்டுத் தொகுதி, தனித் தொகுதி என்பவற்றில் தாழ்த்தப் பட்டவர்கள் இந்துக்கள், அதனால் தாழ்த்தப் பட்டவர்கள் எதைத் தேர்ந்தேடுக்க வேண்டும் என்பதை ஒரு இந்துவின் மனநிலையில் இருந்து தேர்தெடுத்திருக்கிறார் சுவாமி சகஜானந்தர்.
சுவாமி சகஜானந்தர் கூறுகிறார்:

‘நம் மக்கள் அறிய வேண்டுவது ஒன்று உண்டு. அதுதான் கூட்டுத் தொகுதிக்கும் தனித் தொகுதிக்குமுள்ள வேற்றுமை. கூட்டுத் தொகுதி யென்பது இந்து மதத்தவர்களாகிய உயர்வகுப்பினரினின்றும் தாழ்த்தப் பட்ட வகுப்பினரினின்றும் தேர்ந்து கொள்ளப் பட்ட அபேட்சகர்களின் ஸ்தானங்களாம். தனித்தொகுதி யென்பது தாழ்த்தப்பட்ட வகுப்பினரினின்று மாத்திரம் தேர்ந்துக் கொள்ளப் பட்ட அபேட்சகர்களின் ஸ்தானங்களாகும். நாம் இந்து மதத்தவர்கள். ஆதலால், இந்து மக்களனைவருக்கும் பொதுவாகவுள்ள ஆலயப் பிரவேச உரிமை முதலியவைகள் எங்களுக்கும் வேண்டுமென்று வாதிட்டுப் பெற வேண்டியவர்களாயிருக்கிறோம். இதனால் நாம் கூட்டுத் தொகுதியை மேற்கொண்டாற்றான் அவற்றைக் குறித்து அவர்களிடம் வாதிட உரிமையுடையவர்களாவோம்.

இந்து மதத்தவர்களினின்றும் பிரிந்து, தனித்தொகுதியில் நின்று அவ்வுரிமைகளைப் பெற வாதிட வாயேது? ஆலயப் பிரவேசம் முதலிய உரிமைகள் வேண்டான் என்போர் இருப்பாராயின், அவர்கள் நாங்கள் இந்துக்கள் அல்லரென்று சொல்லி, பிறமதம் புகட்டும். ஆலயப் பிரவேசம் முதலிய உரிமைகள் தாழ்த்தப் பட்ட மக்களாகிய நமக்குக் கொடுக்கக் கூடாதென்னும் வஞ்சகமுடைய உயர் வகுப்பினரிற் சிலர் நம்மைத் தனித் தொகுதியில் நிற்கத் தூண்டுகின்றனர். இவர்களுக்கு அஞ்சி விலக வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.’
இவ்வாறு, சுவாமி சகஜானந்தர் தனக்கு சமயம் ஏற்பட்டபோதெல்லாம் தான் ஒரு இந்து, தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கின்றார்.

சுவாமி சகஜானந்தரின் தொண்டு யாருக்காக என்பதை பற்றி அப்போது வெளியான ஒரு பத்திரிகையில் இருந்து நமக்கு வெளிப்படுகிறது.

‘…வித்யா நிலயங்கள் நிறுவி இந்திய ஏழை மக்களாகிய ஆதிதிராவிடர் பலருக்கு இந்துமத உணர்ச்சி செழிக்க அறிவுச்சுடர் கொளுத்தி வருகின்றனர். இவர் செய்யும் பணிக்கு அரசாங்கத்தோரும், அரசியல் வாதிகளும், தேசபக்தர்களும், மதத் தலைவர்களும் ஒருங்கே துணை நின்று அவரது முயற்சி கைக்கூடும்படி செய்ய முந்துதல் வேண்டும். இந்து மடாதிபதிகள் சிலர், ஏன் பலர், தங்கள் களியாடல்களிலும், சிலர் போலி வேதாந்தத்திலும் மருண்டு இந்து மதம் நாட்குநாட்டேய்ந்து பிற உயிரற்ற மதங்கள் செழித்து கொழித்து வருவதையறியாது கிணற்றுத் தவளைகள் போல வெறும் வறட்டுப் பல்லவி பாடிக் கொண்டிருப்பதுமின்றி கால நிலையறிந்து அதற்கியைந்தன செய்யும் பிறரையும் அலக்கணுறச் செய்து வருகின்றனர். இவர்கள் திருந்துங் காலமே இந்துமதம் உயிர்த்தெழுங் காலமாகும்.
இத்தருணத்து சுவாமி சகஜாநந்தா போன்றோர்க்கு உதவி செய்வது இந்து மதத்திற்கு – இந்தியற்கு – பாரத தேவிக்கு உதவி செய்வதாகும்…’
என்று ஒரு பத்திரிகையில் வந்த செய்தியை ஊழியன் இதழ் 20-10-1925ல் வெளியிட்டது.

இதுமட்டுமல்லாமல் கோயில் சொத்து கோயிலுக்கே என்பதில் தீவிரத்துடன் இயங்கி இருக்கிறார் சுவாமி சகஜானந்தர். அவர் கூறுகிறார் :

‘…வெள்ளைக்காரன் போகிற பரியந்தம் கோயிலில் கை வைக்கவில்லை. காங்கிரஸ் அரசு வந்து எத்தனையோ நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் கோயில் முதலியவைகளைப் பாருங்கள். எவ்வளவு பணம் செலவு செய்து அவைகளைக் கட்டி இருக்கிறார்கள். அந்த மாதிரி காரியங்களை இப்போது நாம் செய்யப் போகிறோமா? இருக்கிறவைகளை வைத்து நடத்த வேண்டும். அதுதான் நியாயம். அதனால் தாங்களும் ஏழைகளுக்குக் கொடுத்தும் சாப்பிடுகிறார்கள். இனாம் தாரி நிலங்களையும் ஜமீன் நிலங்களையும் பங்கிட்டு ஏழைகளுக்குக் கொடுக்கலாம். ஆனால் கோயில் சொத்து பொதுச் சொத்து. அதில் கையை வைப்பது அவ்வளவு நியாயம் இல்லை. உடலையும் ஓம்ப வேண்டும், உயிரையும் ஓம்ப வேண்டும். உடலுக்கு உயிரா, உயிருக்கு உடலா? அநேகருடைய சொத்துக்களைத் திருவடியில் சமர்ப்பித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகையால் கோயில் நிலங்களைப் பொறுத்து ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும்’
(சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்புத் தொகுதி எண்VII, 1947, அக்டோபர் 29, பக் 61-62) இன்று இந்து இயக்கங்கள் என்ன சொல்கின்றனவோ அதை 1947லேயே கூறி, அதற்காகப் பரிந்து பேசியிருக்கிறார் சகஜானந்தர் எனும்போது அவர் கோயில்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை உணர முடிகிறது.

திராவிடக்கழக எதிர்ப்பு
புத்தக சாலை சம்பந்தமாக கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஆதரித்து பேசும்போது நமது இந்து மதத்திற்கும், கலை அபிவிருத்திக்கும் முக்கியமாக இந்த பில் கொண்டுவரப் பட்டுள்ளது போற்றத் தக்கது என்று கூறினார். மேலும் புத்தகசாலை எவ்வாறு அமைக்க வேண்டும் என்றும் தன் கருத்தை கூறினார்.
”பெரிய புராணம், பாரதம், இராமாயணம், இராமகிருஷ்ணர் பரமஹம்சர் சரித்திரம், மகாத்மா காந்தியின் சரித்திரம், அவர்களுடைய உபதேச மொழிகளையும், திருக்குறள், பகவத்கீதை, ஆகம சாத்திரங்கள், திருப்பாவை, குமரேச வெண்பா, ரிக், யஜூர், சாம, அதர்வண வேத புத்தகங்களையும், பைபிள், குரான் போன்றவைகளையும் வைக்க வேண்டும்” என்று கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ”மதத் துவேஷம், ஜாதித் துவேஷம் உண்டாகக்கூடிய பிரசுரங்களையும், புத்தகங்களையும் வைக்கக் கூடாது. அவைகளால் சாஸ்திரங்கள் மீது பாமர மக்கள் துவேஷம் கொண்டு ரொம்பவும் கெட்டு விட்டது. அந்த மாதிரி நூல்களை மாத்திரம் இந்த லைப்ரரிகளில் வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது இந்த நாட்டிற்கு ஒருபெரிய அணுகுண்டைப் போலாகி விடும். சமூகத்துக்குத் துவேஷமுண்டாக்கக் கூடிய நூல்களை வைக்க கூடாது. அதோடு கூடக் கருப்புச் சட்டைக் காரர்களுடைய குடியரசு முதலிய பத்திரிகைகளைப் போடுகிறார்கள். அது குழந்தைகளையும் ஊரையும் கெடுத்துவிடுகிறது. அது அநியாயமாக இருக்கிறது. இதனால் நம் ஹரிஜனங்களிலும் பலர் விபூதி, திருமண் முதலியவைகள் இட்டுக் கொள்வது கிடையாது. இவர்களைப் பார்க்கும் போது என் மனம் வருந்திக் கொண்டே இருக்கிறது” என்றார். கடைசியாக ”எந்த மத சம்பந்தமாக இருந்தாலும் தெய்வ புத்தியுள்ளதாகவே இருக்க வேண்டும். துவேஷத்தை உண்டு பண்ணக்கூடிய நூல்களை வைக்க கூடாது. பொதுஜனங்களிடம் நாஸ்திகம் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ரொம்பவும் அவசியமே” என்றும் வலியுறுத்தினார்.

1948 பிப்ரவரி 21ம் தேதி பெரியாரின் இராமாயணத்தை எரித்தல், ராமனது சிலையை செருப்பால் அடித்தல் போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்தார். விநாயகர் சிலை உடைப்பையும் எதிர்த்தார். அதேபோல எம்.ஆர்.ராதா நடித்த கீமாயணத்தில் இராமனை இழிவு படுத்தியதையும் கண்டித்தார். காந்தியின் ”ரகுபதி ராகவ ராஜா ராம்” என்ற பாடலை இழிவுபடுத்தி பேசியதையும் கண்டித்தார். அரசாங்கத்திடம் இத்தகைய செயல்கள் இந்துக்களின் மனதை புண்படுத்துகின்றன, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முறையிட்டார். ஒரு தனிப்பட்ட மனிதருக்கு அளிக்கப்படும் சுதந்திரமானது இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தும் விதத்தில் அமைந்து விடக் கூடாது என்று சொன்னார்.

இது தொடர்பாக அவர் சட்டமன்றத்தில் பேசும்போது கடும் எதிர்ப்பு வந்த்து. அதை அஞ்சாமல் எதிர்கொண்டார். நாமதாரியாக சட்டமன்றம் சென்ற ஒரே தாழ்த்தப்பட்ட சமுதாய சீர்திருத்தவாதி இவர் ஒருவரே.
ஈ.வெ.ரா தஞ்சை விவசாயிகள் கொடூரமாக எரிக்கப் பட்டபோது (1968-69) அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றினார் என்று நமக்கு தெரியும். அவர் ஒரு பிற்படுத்தப் பட்டவரின் மனநிலையிலேயே அப்படி பேசியிருக்கிறார். அதாவது கொன்றவர்களுக்கு ஆதரவாக பேசினார். ஏனென்றால் அவர் தாழ்த்தப்பட்டவர் இல்லையே? ஆனால் இதே பிரச்சினைக்காக 1951லேயே சுவாமி சகஜானந்தர் சட்ட மன்றத்திலேயே தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கிறார்.
சுவாமி சகஜானந்தர் கூறுகிறார் :

‘இன்னும் கூலி கொடுக்கும் விஷயத்தில் தஞ்சை ஜில்லாவில் பெரிய கலகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இவைகளையெல்லாம் கம்யூனிஸ்டுகள் தான் செய்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். ஆனால் உண்மையில் கம்யூனிஸ்டுகள் கலகம் செய்யவில்லை. பயிரிட்டு விட்டு சாப்பாட்டிற்குக் கூலி சரியாகக் கிடைக்காத காரணத்தால் தான் விவசாயிகள் மிராசுதார்களிடத்தில் சண்டை போடுகிறார்கள். அதனால் தான் கம்யூனிஸ்டுகள் என்று அடக்குகிறார்கள்.
ஆகையால் கூலி நிர்ணயம் செய்து ஒரு சட்டம் இயற்றுவது தான் நல்லது. இன்னும் பெரும் நிலக்காரர்களிட உள்ள நிலத்தை எடுத்துப் பங்கிட்டுக் கொடுக்கும் படியாகவும் கேட்டுக் கொள்ளுகிறேன். அதோடு விவசாயிகளுக்கென்று ஒரு சம்பள போர்டை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.’

(சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்புத் தொகுதி எண்IX, 1951, மார்ச் 2, பக் 390)
சுவாமி சகஜானந்தரின் இந்தப் பேச்சைப் பார்க்கும்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான ஈவெராவின் பச்சை துரோகப் பேச்சை விமர்சிக்கத் தோன்றுகிறதல்லவா?

கிறிஸ்தவ மதமாற்ற எதிர்ப்பு
சுவாமி சகஜானந்தர் தனக்கு ஏற்பட்ட கிறிஸ்தவ மதமாற்ற தூண்டுதல்களைக் குறித்து உணர்ந்தே இருந்தார். இந்துக்கள், முக்கியமாக தாழ்த்தப் பட்டவர்கள் மதம் மாறக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். மிஷநரிகளின் மதமாற்ற செயல்களை அறிந்தே இருந்தார். ஒருமுறை சட்டமன்றத்தில் பேசும்போது,
‘சிதம்பரத்தில் இந்து ஆதிதிராவிடர்களால் நடத்தி வரும் அனாதாலயத்தில் 44 பேருக்கு போர்டிங்கு நடத்தினர். அரசாங்கத்தார் அதற்குப் பையன் ஒருவனுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் கொடுத்துள்ளார்கள். இது எந்தக் கணக்குப்படி கொடுத்தார்களென்று புலப்படவில்லை. ஆனால் மிஷனெரிகளுக்கு வாரி வாரி கொடுத்து வருகிறார்கள். மிஷனெரிகளுக்கு கொடுத்து வரும் பணம் தாழ்த்தப் பட்டவர்களைக் கிறிஸ்தவராக்குவதற்குப் பயன்படுகிறது. …..கிறிஸ்தவ போர்டிங்கில் ஆதிதிராவிடப் பிள்ளைகள் சேர்வதால் முதலில் மாணவன் சேருகிறான். பிறகு அவன் தாய் தந்தையர் அவன் மூலம் சேருகிறார்கள். அப்படியே தொடர்புள்ள பலர் சேருகிறார்கள். அதனால் ஆதிதிராவிடச் சமூகத்திற்குப் பெரிய நஷ்டம் உண்டாகிறது.
தாழ்த்தப் பட்டவர்களின் பேரால் மிஷனெரிகளுக்குப் பணங்கொடுக்க கூடாது. ஆனால் கிறிஸ்தவர்களுக்கென்றே கொடுக்கட்டும். அது எங்களுக்குச் சம்மதம்.

இந்த மாகாணத்தில் சுமார் ஏழாயிரம் பேர்களுக்கு அரசாங்கத்தார் போர்டிங் கிராண்டு கொடுத்து வருகிறார்கள். அதற்காக இரண்டு லட்சங்கள் செலவழிகின்றன. அவற்றில் பெரும்பாலும் கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திற்குப் போகிறது. தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பயன்படுவதில்லை. ஆனால் ஏற்கனவே கொடுத்து வரும் பணத்தை நிறுத்தும்படி யான் சொல்லவில்லை. நமது மாண்புமிக்க மந்திரியவர்கள் இந்த வருஷம் ஐம்பதினாயிர ரூபாய்கள் அதிகப் படுத்தியுள்ளார்கள். அதிகப் படுத்தியுள்ள அந்த ஐம்பதினாயிரத்தைத் தாழ்த்தப் பட்ட இந்து ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கிவைத்துவிட வேண்டுகிறேன். மிஷனெரிக்கு மிஷன் மூலமாய் உதவியுண்டு.’
என்று கூறினார் (1933 மார்ச் மாதம் 21ம் தேதி பேசியது. எண் LXVI, பக் 539-543).
1948 மார்ச் 1ம் தேதி பேசும்போது

‘சேரிகளில் பள்ளிக்கூடங்கள் வைத்தால் அதற்கு கிறிஸ்துவ ஆசிரியர்கள் நியமிக்கிறார்கள். அப்படி நியமிப்பதால் அவர்கள் பிள்ளைகளைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி விடுகிறார்கள். அது கூடாது. இன்னும் அங்கே சுயமரியாதைக் காரர்கள் வந்து பள்ளிக்கூடத்தை நாசமாக்கி விடுகிறார்கள். ஆகையால் ஆசிரியர்களை நியமிக்கும்போது யோக்கியமுள்ளவர்களாகப் போடவேண்டும். இவைகளை தடுக்க இந்து ஹரிஜன ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும்.’ என்று கூறினார்.

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டது என்ற பொய்ப்பிம்பத்தையும் உடைத்திருக்கிறார் சுவாமி சகஜானந்தர்.

‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பாடுபட்டார் ஜஸ்டிஸ் கட்சியார். அப்போது நாம் அவர்களோடு ஒத்துழைத்திருக்கிறோம். ஆனால் ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்திலிருந்த போது அவ் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கையாண்டதில்லை என்பது கவனிக்கத் தக்கது.’
என்று கூறுகிறார்.

சுவாமி சகஜானந்தர் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் இந்து சமயத்திற்கும் அயராது பாடுபட்டிருக்கிறார். தாழ்த்தப் பட்டவர்களுக்கும், இந்து சமயத்திற்கும் எதிராக யார் இயங்கினாலும் அதை எதிர்த்து செயல்பட்டு இருக்கிறார்.
சுவாமி சகஜானந்தர் ஒரு உண்மையான இந்து, மாபெரும் இந்து சமுதாயச் சிற்பி, ஆன்மீக அருளாளர், தன்னலம் கருதாமல் உழைத்த சமுதாயத் தலைவர் என்பதை நினைவில் கொண்டு அவரைப் போற்றுவோமாக.


(நன்றி: மின் தமிழ் ) பன்முக ஆளுமை கொண்ட சுவாமி சகஜானந்தர் குறித்து நண்பர் ம.வெங்கடேசன் எழுதியுள்ள ஒரு விரிவான கட்டுரை -  http://www.tamilhindu.com/2012/11/voice-of-an-oppressed-hindu-sahajanandar/

தமிழர்கள் வரலாறு

மிழர்கள் வரலாறு உருவாவதற்கு முன்பே வாழ்ந்தவர்கள் இக்கருத்தைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தகுடி என்ற வழக்கு வலியுறுத்துகின்றது. இவ்வழக்கை வெறும் மேம்போக்காகக் கூறுவதை விடுத்து ஆய்வுக் கண்கொண்டு நோக்கின், கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பேயான தொல்லுலகில் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்பது மாத்திரமின்றி, அத்தொன்மைக் காலத்திலேயே இக்குடி மூத்து முதிச்சு நிலையினையும் அடைந்திருந்தது என்பதும், எல்லாத் துறைகளிலும் கலை கண்டிருந்தது என்பதுமான மாபெரும் உண்மை புலனாகும்.தொடக்கக் காலத்தில் முதிர்ச்சியுள்ள வளர்ச்சி நிலையை எட்டியிருந்த தமிழர், தம் மொழியை இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூவகைப்படுத்தி வளர்த்து வந்தனர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் பற்றியும், தமிழரின் வாழ்க்கை நிலை பற்றியும் அறிந்து கொள்வதற்குத் தமிழிலக்கியங்கள் பெரிதும் துணை புரிகின்றன.


தமிழர்கள் முத்தமிழோடு கலை மற்றும் கலாச்சாரத்திலும் சிறந்து விளங்கிய சிறப்பையும் இலக்கியங்கள் தெளிவாக்குகின்றன. எனவே இலக்கியங்களே தமிழர்தம் கலை மற்றும் கலாச்சாரம் பற்றி அறிய உதவும் முதற்சாதனங்களாக அமைகின்றன. ஆகவே இலக்கியம் குறிப்புகளின் அடிப்படையில் இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ் மற்றும் நுண்கலைகள் என்னும் ஐந்தமிழுள் இசைத்தமிழ் பற்றிய கருத்துக்களைத் தொகுத்து, ஆய்ந்து அரிய உண்மைகளை வெளிப்படுத்தும் அரியதோர் முயற்சியாகவே இக்கட்டுரை அமைகிறது.முதற்கண் இயல் தமிழ் என்பது எது? இது பற்றித் தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகள் யாது என்பது பற்றி ஆராயப்படுகிறது.


இயற்றமிழ் ஒரு விளக்கம்அனைத்துத் துறையிலும் இயலுகின்றதும், இயக்க வைப்பதுமாகிய இயற்றமிழ் என்பது தமிழர் யாவர் மட்டும் பொதுமையின் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்கிலும் இயங்குகின்ற வசனமும், செய்யுளுமாகிய நூல்களில் தொகுதியாம் என்பர் திரு.ந.சி. கந்தையா பிள்ளைபடித்த மாத்திரத்தில் ஒன்பான் சுவை தரத்தக்கதாக அமைந்துள்ள இயற்றமிழினுள்ளே எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து வகை இலக்கணமுமே அடங்கும், இன்னும் தெளிவாகக்க கூறப்கின் வழக்கியலும் வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளியலும் பற்றி எழுந்த இலக்கணம் இயற்றமிழ் எனப்படும் என்பர் பேராசிரியர். எனவே இயற்றமிழில் இலக்கணம், இலக்கியம், செய்யுள், உரைகள், உரைநடை, புராணம் ஆகிய அனைத்தும் அடங்கும் என்பது தெளிவு. முத்தமிழில் முன்னர் தோன்றியமையாலும், இயலின்றி ஏனை இசை மற்றும் நாடகத் தமிழ் இயங்கவியலாமையாலும் இவ்வியற்றமிழ் முத்தமிழ் முதன்மைபடுத்தி மொழியப்படுகின்றது.இயற்றமிழன் பின் வைத்து எண்ணப்படுகின்ற இசைத் தமிழ் பற்றியும் இசைத்தமிழ் எவ்வாறு கூத்து என்னும் நாடகத் தமிழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்குகிறது என்பது பற்றியும் அடுத்து ஆராயப்படுகின்றது.இசைத்தமிழ் விளக்கம்: இயற்றமிழே பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் அதுவே இசைத் தமிழாகின்றது. தொல்காப்பியம் இயற்றமிழ் இலக்கணத்தோடு இசைத் தமிழிலக்கணமும் இழையோடிக் கிடக்கின்றது. இவ்விரு தமிழும் வெவ்வேறாகப் பிரித்தறிய முடியாத வகையில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.


இசை பொருள்: இசை என்ற சொல்லுக்கு இசைவிப்பது, வயப்படுத்துவது ஆட்கொள்வது என்று பல பொருள் உண்டு. இசை என்ற சொல் மக்கள் மனதை வயப்படுத்துவது, அசைவிப்பது எனும் பொருளைத் தருகிறது என்பர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையையேயாகும். இனிய ஒலிகள் செவி வழிப்புகுந்து, இதய நாடிகளைத் தடவி, உயிரினங்களை இசையவும், பொருந்தவும் வைக்கின்றள பொழுது அவை இசை என்ற பெயரைப் பெறுகின்றன என்பர் ச.வே. சுப்பிரமணியன் அவர்கள்.ஒலி, ஓசை, இசை:- இசைக்கு அடிப்படையாக இருப்பது ஒலி, ஒலியே உலகின் முதல் தோற்றம் என்பது சமயங்கள் உணர்த்தும் உண்மை. இவ்வுலகமே ஓங்கார ஒலித்திரளின் இருப்பாக உள்ளது என்பதும் ஒரு தத்துவம், மூலாதாரமான ஒலி வேறு ஓசை வேறு ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என இறையைப் பற்றிக் கூறும் அப்பரின் தேவார வரிகளிலருந்து ஓசை வேறாகவும், ஒலி வேறாகவும் கருதப்படுவதை உணர முடிகிறது. ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையே என்னும் தேவார அடிகள் நரம்பிலிருந்து எழும் ஓசையை ஏழிசையாக அமைகிறது என்று சுட்டுகின்றது. எனவே ஓசையே இசைக்கு அடிப்படை என்பதை உணர முடிகிறது.


ஒலி என்பது ஒரு குறிப்பைக் கருதி எழுந்து, இனிதாய் அமைந்து சுவைப் பயப்பதாக இருக்க வேண்டும். காலக் கடப்பால் ஏற்பட்டுள்ள சொல் பயன்பாட்டை நோக்கும்போது இசையும் ஒலியும் சில இடங்களில் வேறுபாடு கருதாது பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.ஓசை மற்றும், இனிதாய் அமைந்து சுவை பயப்பதாக இருப்பதான ஒலியின் அடிப்படையில தோன்றுவதான இசைக்கலை ஆயக்கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்றான சிறப்புடைய சுவையாகும். இயல் தமிழைக் கற்றும், கேட்டும் அனுபவிக்கவும் சுவைக்கவும்க முடியும். ஆனால் இசையையோ செவிப்புலன் ஒன்றினால் மாத்திரமே சுவைக்க முடியும்.இசையும் இறையும்: இசையின் சிறப்புணர்ந்த நம் முன்னோர் ஆதிமூலமான ஆண்டவனும் இசையை விரும்புகின்றான், இசை பாடுகின்றான், என்பதுடன் இசையின் வடிவாகவும், இசையின் பயனாகவும் உள்ளான் என்று கண்டறிந்தனர்.துறைவாய் நுழைந்தனையோவற்றி யேழிகசைச்
சூழல் புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொலாம் புகுந்த
தெய்தியோ - எனும் திருக்கோவையார் பாடல் ஏழிசைச் சூழலில் இறைவன் ஆட்பட்டான் என்பதைத் தெரிவிக்கின்றது. ஏழிசையாய் இசைப்பயனாய் என்று சுந்தரரும் எம்மிறை நல்வீணை வாசிக்குமே என்று அப்பரும் கூறியுள்ளமையும் நோக்கத் தக்கது.ஆதி மனிதனும் இசையும்: மொழியறியாது வாழ்ந்த மனிதன் இனம் புரியாத மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் எழுப்பிய ஓசையும் ஒலியுமே இசையாயிற்று. மகிழ்ச்சி மற்றும் துன்பப் பெருக்கின் உச்ச கட்டமாக அவன் கைதட்டி எழுப்பிய ஆரவாரமே தாளமாயிற்று. சிலை வளைத்துக் கணை தொடுத்து வேட்டையாட முற்பட்ட போது எழுந்த நாதமே இசைக்கருவிகளின் தோற்றத்திற்கு மூலமாயிற்று.இசையின் பழமைதொல்காப்பியம்: மனிதனின் உணர்ச்சிப் பெருக்கோடு ஒன்றி வளர்ந்த இசை பற்றி நமக்கு உணர்த்தும் முதல் நூலாக தமிழின் கருத்துக் கருவூலமான தொல்காப்பியத்தையே கொள்ளலாம்.அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிய இசையோடு சிவனிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்எனும் தொல்காப்பியம் அடிகள் இசையில் பழமையை உணர்த்தும் தொல்காப்பியச் சொற்களின் ஓசையதிக்கு வண்ணம் என்று பெயரிட்டு," வண்ணந்தாமே நாலைந்தென்ப "என்று கூறுவதன் மூலம் அதனை இருபது வகைப்படுத்திக் கூறியுள்ளார். வண்ணங்கள் என்றால் சந்த வேறுபாடுகள்- என்பர் பேராசிரியர் இவ்விருபது வண்ணங்களையும் தேவாரம், திருப்புகழ், கீர்த்தனை, சிந்து, கண்ணி முதலிய பாடல்களில் தெளிவாகக் காணலாம்.எதுகை, மோனை, இயைபு, முதலிய தொடைகளின் இலக்கணம் இசைக் கீர்த்தனைக்கும் இசைப்பாடல்களாகிய தாண்டகம், நேரிசை, விருத்தம் முதலியவற்றிற்கும் இன்றியமையாது வேண்டப்படுபவனவாம்.


 எதுகை, மோனை போன்ற தொடைகளில்லையேல் இசைப்பாடல்கள் இல்லை. இசைப்பாடலுக்குரிய யாப்பு வகைகளைத் தொல்காப்பியர் அழகாகவும் தெளிவாகவும் வகுத்தும் பகுத்தும் காட்டியுள்ளார்.செய்யுட்களின் சிறப்பிற்கு எதுகை, மோனை, முதலிய தொடை விகற்பங்கள் பெரிதும் துணைபுரிந்தமையினின்று இயற்றமிழும் இசையமைதி பெற்றிருப்பது புலனாகும். வெண்பா முதலிய பாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான இசையுடனேயே பண்டு தொட்டு ஓதப்படுகின்றன. அவற்றுள்ளும் கலிப்பா, பரிபாட்டு முதலியவற்றை இசைப்பாக்கள் என்றே பேராசிரியர் முதலிய பேருரையாளர்கள் கூறுவராயினர். வெண்பா முதலிய பாக்களுக்கு இனமாக வகுக்கப்பெற்ற தாழிசை துறை முதலியனவும் இசைப் பாக்களேயாதல் வேண்டும். தொல்காப்பியரே முதன்முதலில் எதுகை, மோனை ஆகியவற்றைப் பிரித்துக் கூறும் யாப்பிலக்கணத்தை அறிமுகப்படுத்தியவராவார். தொல்காப்பியர் கூறும் பண்வரிசை முறை தமிழக இசை முறைகளில் வழி வழியாகப் பண்களை வரிசையில் நிற்கச் செய்யும் முறைகட்கெல்லாம் முன்னோடி எனலாம்.தொல்காப்பியத்தின் வழியாக அறியப்படும் இசைச் செய்திகள்1. நால்வகை நிலங்கட்குரிய பண்வகைகள்
2. பண்களுக்குரிய பெரும்பொழுது சிறுபொழுதும்,
3. பண்களை வரிசைப்படுத்தி நிறுத்தியது.
4. பாடலின் அமைப்பிற்கும் சிறப்பிற்கும் தேவையான எதுகைமோனை முதலிய தொடை வகைகள்
5. அம்போதரங்க அமைப்பு
6. இசை எழுத்துக்களின் மாத்திரை அளவும்
7. தாள நடை வகைகள்.இசைத் தமிழ் நூல்கள்:- இசைத் தமிழ் விரிவானது. ஆழமானது. பல துறைகள் கொண்டது, இவ்விசைத் தமிழ் நூல்கள் சங்க காலத்திலேயே எண்ணற்றவை இருந்தன என்பதை இறையனார் களவியலுரை ஆசிரியரின் கூற்று வலியுறுத்தும், முதற் சங்க வரலாறு பற்றிக் கூறும் இவர், அவர்களால் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும் முதுகுருகும், களரியாவிரையுமென இத்தொடக்கத்தன, என்றும் கடைச்சங்கம் பற்றிக் கூறுமிடத்து அவர்களாற் பாடப்பட்டன. நெடுந்தொகை நானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப் பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையுமென இத்தொடக்கத்தன என்றும் குறிப்பிட்டுள்ளதிலிருந்து இசைத் தமிழில் பல தலைசிறந்த நூல்கள் முதற் சங்க காலத்திலேயே இருந்தன என்பதும், கடைச் சங்க காலத்து எழுந்த எட்டுத்தொகை நூல்களும் இசைத்தமிழ் தொடர்புடையன என்பதும் விளங்குகின்றது.


 பெருநாரை, தாளசமுத்திரம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுட்டுரைக் கோவை போன்ற எண்ணற்ற இசைத் தமிழ் நூல்களும் வழக்கில் இருந்து, பின்னரே வழக்கு ஒழிந்ததோ, கடல்கோட்பட்டோ மறைந்திருத்தல் வேண்டும்.பரிபாடல்: இன்று நமக்கு கிடைத்திருக்கும் இசை பற்றிய குறிப்புகளில் பழமையான இலக்கியமாகத் திகழ்வது பரிபாடல். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான இது கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகும். 70 பாடல்களைக் கொண்ட இந்நூலில் கழிந்தன போக இன்று எஞ்சியுள்ளவை 22 ஆகும். இவற்றுள் ஒவ்வொரு பாடலின் கீழும் அப்பாடலின் ஆசிரியர் பெயரும் அதற்கு இசை அமைத்தவர் பெயரும், அதற்குரிய யாழ், செந்துறை, தூக்கு வண்ணம் முதலியவும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் பரிபாடலில் செய்யுள் ஒவ்வொன்றிற்கும் பாலையாழ், நோதிரம், காந்தாரம் எனப் பண்கள் குறிக்கப்பட்டுள்ளன. இசை வகுத்தோராகப் பதின்மர் பெயர்களும் அதில் காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலில் மாத்திரமின்றி பதிற்றுப்பத்திலும் ஒவ்வொரு பாடலுக்கும் வண்ணம், தூக்கு, துறை, இசை பகுப்புகள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன.


எட்டுத் தொகை நூல்களையடுத்து பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களில் இசை பற்றியும், இசைக்கலைஞர்கள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை முதலியவை இசைக் கலைஞர்கள் பெயரால் அமைந்த நூல்களாகவே காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலில் மாத்திரமின்றி பதிற்றுப் பத்திலும் ஒவ்வொரு பாடலுக்கும் வண்ணம், தூக்கு, துறை, இசை பகுப்புகள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன.எட்டுத் தொகை நூல்களையடுத்து பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களில் இசை பற்றியும், இசைக் கலைஞர்கள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிறுபாணாற்றுப்படை முதலியவை இசைக் கலைஞர்கள் பெயரால் அமைந்த நூல்களாகவே காணப்படுகின்றன. திருமுருகாற்றுப்படை தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, ஆடலாகிய கூத்து, கண்டமாகிய இசை மரபிற்கான பஞ்ச மரபினைப் பெற்று தமிழிசையின் சிறப்பை விளக்கவல்ல ஆற்றுப்படை நூலாகத் திகழக் காணலாம்.சிலப்பதிகாரம்: சங்க இலக்கியத்தை அடுத்த சிலப்பதிகாரத்தில் இசை பற்றி செய்திகள் மிகவும் பரந்து காணப்படுகின்றன. சிலம்பின் கதைப்பகுதிகளுடன் இசை இலக்கணம் பின்னிப் பிணைந்து இயற்றப்பட்டுள்ளன என்றே கூறலாம். தமிழிசை இலக்கணம் கூறும் பெருங்கடலில் சிலம்பு ஓர் ஓங்கி உயர்ந்த கலங்கரை விளக்கம். இது நல்கும் ஒளியின் உதவியால் இதற்குக் காலத்தால் முந்திய தொல்காப்பியம், எட்டுத் தொகை பத்துப்பாட்டு முதலிய சீரிய நூல்களில் தமிழ்ப் பேரறிஞர்கள் சுட்டியுள்ள ஏராளமான இசைக் குறிப்புகளை விளங்கிக் கொள்ளலாம்.சிலம்பின் ஆசிரியரும் சேரநன்னாட்டின் இளவரசருமான இளங்கோவடிகளை இந்திய நாடு கண்ட இசை மாமேதை என்றும், இசை இலக்கணத்தை அறிவியல் முறையில் அமைத்துத் தந்துள்ள இசை இலக்கணத் தந்தை என்றும் கூறலாம். இளங்கோவின் காலத்திற்கு முன் பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வழிவழி வந்த இசை இலக்கண மரபு சிலம்பில் காணப்படுகின்றமையின் தொல்காப்பிய இசைக் குறிப்புகளை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது.


தொல்காப்பிய இசைக் குறிப்புகளை விளக்குவது சிலம்பின் இசை இலக்கணமே - தமிழிசை இலக்கணம் சிலம்புதொட்டு இன்று வரை சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து வருகிறது என்பர் டாக்டர் எஸ். இராமநாதன்.தமிழில் ஒப்பற்ற இசைப்பாக்களாக நமக்குக் கிடைத்திருப்பன சிலப்பதிகாரத்தில் உள்ள கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்குழ் வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை எனும் ஆறு காதைகளும் ஆகும். இந்த ஆறு காதைகளுமே இசைப்பாக்களின் தொகுதியாகும்.உதயணன் கதையினைக் கூறும் பெருங்கதையிலும் யானையின் சீற்றத்தை சீவ சிந்தாமணியல் காந்தருவதத்தை யார் இலம்பகத்தில் இடைக்காலத் தமிழிசையினைப் பரக்கக் காண முடிகின்றது.இனி தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு இசையை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதைத் தமிழ் நூல்களின் துணை கொண்டு நோக்கலாம். தமிழின் தொன்மை நூலான தொல்காப்பியத்தில் இசை பற்றிய குறிப்புகளோடு இசைவாணர்கள் மற்றும் பண்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்கட்கும் வெவ்வேறான யாழ், அல்லது பண் கூறப்படுவதினின்றும், அக்காலத்தில் இசைக்கலை பெற்றிருந்த சிறப்பும், ஐவகை நிலமக்களும் பெற்றிருந்த இசையுணர்ச்சியும் பெறப்படுகின்றது.இசையில் பண் என்றும் திறமென்றும் இருவகை உண்டு. பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று என்னும் பரிமேலழகர் கூற்றிலிருந்து, தமிழ்ப் பண்கள் நூற்று மூன்று என்பது கொள்ளப்படுகின்றது. பண்கள் ஏழு நரம்புகளும் கொண்டவை. ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண் எனப்படும்.


 நரம்பு என்பது இங்கு ஸரி கம பத நீ என்றும் ஏழு ஸ்வரங்களைக் குறிக்கும். இந்த ஏழு ஸ்வரங்களை வடமொழியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாராம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று குறிப்பிடுவர். இதுவே தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப்படும்.இவ்விசைகளின் ஓசைக்கு வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனி, ஆடு ஆகியவையும், இவற்றின் சுவைக்கு முறையே தேன், தயிர், நெய், ஏலம், பால், வாழைக்கனி, மாதுளங்கனி, ஆகியவையும் உவமை கூறப்பட்டுள்ளதுடன், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும் இவற்றின் எழுத்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.பண்வகை: பண்கள் பலவகைப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, எனப் பண்கள் ஐந்து என்பர் - ந.சி. கந்தையாபிள்ளை. ஆனால் டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் பெரும்பண்களாவன குறிஞ்சி, முல்லை, மருதம், செவ்வழி, என்பனவாம் என்பர். இப்பண்கள் வடமொழியில் ராகம், என்று கூறப்படுகின்றன. இதனை மேளகர்த்தா, ராகம் அல்லது ஐனகராகம் என்றும் கூறுவர். பண்ணிலிருந்து திறங்கள் பிறக்கும்நிரை நரம்பிற்றே திறமெனப்படுமே என்ற திவாகரச் சூத்திரம் பண்கள், திறங்களின் இலக்கணத்தை விளக்கும் திறங்களே தற்போது ஜன்யராகம் என்று வழங்கப்படுகின்றன.

(நன்றி: tamil reader)

புதன், 28 நவம்பர், 2012

நடிப்பும் - இசையும்

"இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்ந்து
பதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும்,
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு
ஆடலும் பாடலும், பாணியும், தூக்கும்,
கூடிய நெறியின் கொளுத்தும் காலை-
பிண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில்கையும்,
கொண்டவகை அறிந்து, கூத்து வரு காலை
கூடை செய்த கை வாரத்துக் களைதலும்
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும்,
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்,
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் - தன்னோடும்"
—(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை -12 -25 வரிகள்)