ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தேவ தூதர்கள்


இயற்கை வளங்கள் அழிவதை எண்ணி ஒவ்வொரு நாளும் இயற்கை ஆர்வலர்கள் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

உயிர்கள் வாழ காற்று அவசியம், அந்த காற்றில் உயிர் இருக்க வேண்டுமென்றால் மனிதர்கள் காற்றை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும். நாம் அப்படியா மாசுபடுத்தாமல் இருக்கிறோம்?

நம்முடைய அத்தியாவசிய தேவைகளுக்காக நாம் இந்த உலகின் ஒவ்வொரு உறுப்பையும் கழிவுகளால் முடமாக்கி விட்டோம். எங்கு பார்த்தாலும் குப்பைகளால் நிறைந்திருக்கிறது நம் உலகம். எந்த நிமிடங்களிலும் அழுக்குகளோடும் அசிங்கத்தோடும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன்.


இவற்றிலெல்லாம் அக்கறை கொண்டு நமக்காகவும் நமது குழந்தைகளுக் காகவும் பொறுபெடுத்துக் கொண்டு இந்த உலகின் மீட்பை பற்றி சதாகாலமும் சிந்திக்கும் சில நல்ல உள்ளங்களை பார்க்கும் பொழுது நமக்கே நம் மீது ஒரு பிடிப்பு ஏற்ப்பட்டு விடுகிறதை மறுப்பதற்கில்லை.

அப்படி சில மனிதர்களை நான் சந்தித்ததில் குறிப்பிடத்தக்கவர்கள் தான் நவீன கழிவுகளை மறுசுழற்சி செய்து இயற்கை சமநிலையை பேணிகாப்பது குறித்து கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வரும் அப்துல் கனியும், குப்பைகளால் ஏற்ப்படும் கழிவுகளை அப்புறபடுத்தி உலகை அழகு மிக்கதாய் மாற்ற முனையும் நிஷா தொட்டாவும், மிகவும் அருகி வரும் பறவை இனமான குருகினங்களை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு துயரங்களையும் கிண்டல்களையும் புறந்தள்ளிவிட்டு உண்மை தொண்டு செய்யும் சாதனா ராஜ்குமார், ராதா கிருஷ்ணன் அய்யா போன்றோரும் அடங்குவர்.

நம்மோடு வாழும் காலத்தில் இவர்கள் செய்கிற சில நல்ல செயல்களால் எளிதில் உதாரணமாகி விடுகிறார்கள். இவர்களையெல்லாம் நாம் ஏன் நினைவில் வைத்திருக்க வேண்டுமென்றால்... இவர்கள் நம் பிள்ளைகளுக்கு முன்னோடியாக இருக்கிறார்கள். நமக்கு நண்பர்களாகவே இருக்கிறார்கள்.
நம் உலகின் பாதுகாவலர்களாய் பரிமளிக்கிரார்கள்.


உங்களுக்கு இவர்கள் எந்த நேரத்திலும் உதவ காத்திருக்கிறார்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், இவர்களோடு இணைந்து செயல்படுவது மட்டுமே.

தொலைதொடர்புக்கு:

அப்துல் கனி - 9941006786

சாதனா ராஜ்குமார் - 9445249240

வேக சுகுமாரன்.

BT பருத்தியும் தமிழகமும்


 
   
 
யாழ் இணைய பக்கத்தில் வெளிவந்த பருத்தியும் தமிழகமும் எனும் கட்டுரை குறித்து நண்பர்களுக்கும் தெரியபடுத்தும் விதமாகவும் உங்கள் கருத்தை அறியும் விதமாகவும் அந்த கட்டுரையின் ஒரு பகுதியை உங்களுக்காக மறுபதிப்பு செய்திருக்கிறேன். இதன் மூல பக்கத்தில் முழு கட்டுரையையும் படிக்க அதன் முகவரியை நகலெடுத்து பயன்படுத்தவும்.
 
கடந்த சில வருடங்களாக ஊடகங்களை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு மான்சான்டோவின் மரபணு மாற்ற பருத்தியை எதிர்த்து இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் விவசாயிகள் மிக பெரிய அளவில் எதிர்த்து அதை தமிழகத்திலிருந்தே துரத்தி அடித்த செய்தி தெரிந்திருக்கும். இந்த மரபணு மாற்ற பருத்திக்கு எதிராக தினமும் ஊடகங்களிலும் செய்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
 
இந்த முறை இந்தியா சென்ற போது மரபணு பருத்தியின் எச்சங்கள் எங்காவது தென் படுகிறதா என்று எட்டி பார்க்கலாம் என பருத்தி நிறைய வளரும் ஆத்தூர் பக்கம் போய் பார்த்தேன்ஆத்தூரில் உள்ள பிரபல வேளாண் இடுபொருள் கடைக்கு சென்றிறுந்தேன். அந்த கடை நிறுவனரிடம் இப்பெல்லாம் இந்த பக்கம் எந்த பருத்தி அதிகம் பயிரிடுகிறார்கள் என்று கேட்டேன்? ஒரெ ஒரு ரகம் மட்டும் எல்லாம் போடுறதில்லை பல வகை ரகங்கள் போடுகிறார்கள் என்றார். அப்பாடா! மான்சான்டோவின் பருத்தி இன்னும் மோனோபொலி ஆகவில்லை என்று பெருமூச்சு விட்டேன்..இதோ இங்க இருக்குற ரகங்கள் தான் பெரும்பான்மையாக பயிரிடுகிறார்கள் என்று ஒரு அடுக்கை காண்பித்தார்.அங்கு பல கம்பெனிகளின் விதைகள் குவிக்க பட்டிருந்தது.அங்கு இருந்த விதைகளின் பெரும் பகுதி இந்திய கம்பெனிகளுடையதாக இருந்தது.
 
 
ஒவ்வொரு விதை பாக்கெட்டையும் எடுத்து பார்த்த போது மிக பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. ஆச்சர்யம் என்ன என்றால் அனைத்து விதைகளும் மிக பெரிய அளவில் தங்களை விளம்பர படுத்தி இருந்தது அந்த விதைகளில் இருந்த cry ஜீன் எனப்படும் மரபு பொருள் பற்றி தான். cry ஜீன் என்ற பெயர் எங்கோ கேட்டது போல் இல்லை?இது வேறொன்றுமில்லை. மான்சாண்டோ தனது மரபணு மாற்ற பருத்தியில்  இருப்பதாக கூற பட்டுள்ள பூச்சு கொள்ளியை உருவாக்கும் மரபு பொருள் தான்.மரபணு மாற்ற பருத்தி வந்தால் இந்தியாவில் மான்சாண்டோ தவிர வேறெந்த பருத்தி விதையும் இருக்காது என்றார்களே? தற்போது பல கம்பெனிகளும் இருக்கிறதே என்ற குழப்பம் பலருக்கு வரலாம்.பெரும்பாலானவர்கள் நினைப்பது போல் மான்சான்டோ தனது பருத்தி விதையை மட்டும் கொண்டு ஒட்டு மொத்த இந்திய மார்கெட்டையும் கை பெற்றவில்லை. ஆனால் அதன் விற்பனை யுக்தியே வேறு.அது பற்றி அறிய கொஞ்சம் விவசாய அறிவியல் பற்றியும் பின் சென்று பார்ப்போம்.
 
ஆதி மனிதன் நாடோடியாக திரிந்து கொண்டிருந்த போது ,போகும் இடத்தில் தனக்கு கிடைக்கும் காய் கனிகளையும் மாமிசத்தையும் உண்டு வாழ்ந்தான்.அதன் பிறகு ஒரு இடத்தில் இயற்கையாக இருந்த மரம் மற்றும் பிற செடிகளை அழித்து  தொடர்ந்து பயிரிட தொடங்கினான். இந்த இயற்கைக்கு மாறாக செயற்கையாக செய்யும் செயலே விவசாயம் ஆனது. ஆற்றங்கரை நாகரீகங்கள் தொடங்கிய போது ஏற்பட்ட நகரமயமாதலின் அடிப்படையே  இந்த செயற்கையான விவசாயம் தான். அதாவது நகரத்தில் விவசாயம் அல்லாத தொழிலில் ஈடு பட்டவரக்ளுக்கு கிராமங்களில் இருந்து பெரிய அளவில் உணவு பொருட்களை விவசாயம் மூலம் கொடுக்க முடிந்தது. மனிதனும் நீண்ட நாள் சேமிப்புக்கு ஏற்ற தானியம் மற்றும் தனக்கு தேவையான காய் கறிகளை அந்தந்த இடங்களில் இருக்கும் தாவரவகைகளை அழித்து பயிரிட தொடங்கினான்.
 
கடந்த சில நூற்றாண்டுகள் வரை போர், நோய், பஞ்சம் போன்றவற்றால் மக்கள் தொகை பெருக்கம் ஓரளவு கட்டுபடுத்த  பட்டு வந்தது.கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மருத்துவ வசதி காரணமாக  மக்கள் பெருக்கம் கட்டு கடங்காமல் போனது.பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடாகவும், தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாகவும் மனிதன் அளவுக்கு மீறி இயற்கை வளத்தை உபயோகிக்க ஆரம்பித்தான்.
 
பெருகி வரும் மக்களின் பசியை போக்க உற்பத்தியை பெருக்க வேண்டியது அவசியமானது. அதற்கு  விளைநிலங்களின் பரப்பை அதிகரித்து உற்பத்தியை அதிகரித்தனர். ஆனால் ஓரளவுக்கு பின் புதிய விலைநிலங்கள் கிடைப்பது அரிதானவுடன்  உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டியதின் அவசியம் அதிகரித்தது.அதற்கு விவசாய துறை மற்றும் உயிரியல் துறைகளில் மாபெரும் ஆராய்ச்சிகள் நடந்தன.பதினெட்டாம் நூற்றாண்டில் கிரிகர் மெண்டல் என்னும் துறவி பெற்றோர்களிடம் இருந்து எவ்வாறு குழந்தைகளுக்கு பண்புகள் கடத்தபடுகிறது என்று பட்டணி செடியில் ஆய்வு செய்து கண்டறிந்தார்.இரு வேறு பண்புடைய செடிகளை மகரந்த சேர்க்கை செய்து நமக்கு தேவையான பண்புகளை பெரும்பான்மையாக கொண்ட செடிகளை உருவாக்க பயிர் பெருக்க அறிவியல்(Plant Breeding)பெருமளவில் வளர்ந்தது.
 
தொடர்ந்து படிக்க http://www.yarl.com/forum3/index.php?showtopic=133119

நன்றி: யாழ் இணைய பக்கம் 

திங்கள், 2 டிசம்பர், 2013

மாற்றுதிறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


மாற்றுதிறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று நாகப்பட்டினம்,கலெக்டர் முனுசாமி தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகைமாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 2013-14-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை முதல்-அமைச்சர் 2 மடங்காக உயர்த்தி அறிவித்துள்ளார். அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,000-ம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 ஆயிரமும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 ஆயிரமும் உயர்த்தி அறிவித்துள்ளார்.


உரிய சான்றுகளுடன் மேலும் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 ஆயிரமும், தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.7 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும் 75 சதவீதம் பார்வைத்திறன் குறையுடைய 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாசிப்பாளர் உதவித் தொகையாக ரூ.3 ஆயிரமும், இளங்கலை பட்டம் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரமும், தொழிற்கல்வி மற்றும் பட்டபடிப்பு பயில்பவருக்கு ரூ.6 ஆயிரமும் வாசிப்பாளர் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

2013-14-ம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கல்வி உதவித் தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று வருகிற 15-ந் தேதிக்குள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

தேசிய அடையாள அட்டை இந்த கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு மதிப்பெண் சான்று தேவையில்லை. தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 9-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயில்பவர்கள் கடந்த கல்வியாண்டின் இறுதி தேர்வில் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதற்கான மதிப்பெண் சான்று இணைக்கப்பட வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு, பாஸ்புத்தக நகல் இணைக்க வேண்டும்.

75 சதவீதம் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகையோடு வாசிப்பாளர் உதவித்தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக அரசின் வேறு எந்த துறையின் மூலமாகவும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்திருத்தல் கூடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மூலப் பிரதி: தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தஞ்சை (2.12.2013)

இந்த செய்தியின் முழு விவரத்தையும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும். http://www.tjtnptf.com/2013/12/blog-post.html

இரு அவ்வையார் இருந்தனர் - செய்தி


கடந்த நவம்பர் மாதம் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்ப்படுத்திய அவ்வையார் பற்றிய செய்திகளை தினமலர் நாளிதழிலிருந்து அப்படியே உங்களுக்கு தருகிறோம்.

தமிழக அரசின், ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், 'இரு அவ்வையார் இருந்தனர்' என, தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சங்க காலத்தைச் சேர்ந்த, மிகச் சிறந்த பெண்பாற் புலவர், அவ்வையார். தமிழிலும், அரச நிர்வாகத்திலும், நிறைந்த அறிவைப் பெற்றவர். தமிழில் ஏராளமான பாடல்களை
பாடியுள்ளார்.

தமிழ் பாட புத்தகங்களில்:

அறிவிற் சிறந்த அவ்வையார், நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக, அவருக்கு, அதியமான் நெல்லிக்கனி கொடுத்ததும், திருவிளையாடல் புராணத்தில் சம்பந்தப்பட்டிருப்பது குறித்தும், தமிழ் பாட புத்தகங்களில் இடம் பெறுகின்றன. அவ்வையார் எழுதிய, 'ஆத்திச்சூடி' பாடலும், தமிழ் பாட புத்தகத்தில் இடம் பெறுகிறது.பல ஆண்டுகளாக, கல்வித் துறை வெளியிட்ட பாட புத்தகங்களில், 'அவ்வையார் என்பவர், ஒருவரே' என, பொருள் படும் வகையில், கருத்துக்கள் இடம் பெற்றன.

தற்போது, ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் (இரண்டாம் பருவம்), திடீரென, 'அவ்வையார், ஒருவர் அல்ல; இரு, அவ்வையார்கள் இருந்தனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.புத்தகத்தின், 32வது பக்கத்தில், ஆசிரியர் குறிப்பு என்ற தலைப்பின் கீழ், 'அவ்வையார், சங்கப் புலவர்; அதியமானின், நண்பர்; அரிய நெல்லிக்கனியை, அதியமானிடம் பெற்றவர். சங்க காலத்தி்ல், பல பெண் கவிஞர்கள் இருந்தனர். இவர்களில், அதிக பாடல்களை பாடியவர், அவ்வையார். சங்கப்பாடல் பாடிய அவ்வையாரும், 'ஆத்திச்சூடி' பாடிய அவ்வையாரும் ஒருவர் அல்ல; வேறு வேறானவர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென தகவல்:

இத்தனை ஆண்டு காலமாக, அவ்வையார் எத்தனை பேர்; அவர்களைப் பற்றிய முழுமையான வரலாறு; அவர்கள் பாடிய பாடல்கள் என, விளக்கமாக, எந்த தகவலையும் வெளியிடாமல், இப்போது, திடீரென, 'இரு அவ்வையார்கள் இருந்தனர்' என, கல்வித் துறை தெரிவித்துள்ளது.இந்த தகவலைப் பார்த்து, மாணவர்களும், பெற்றோரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த, பெற்றோர், அசோக் கூறியதாவது:என் மகள், 'அவ்வையார், எத்தனை பேர்?' என, என்னிடம் கேட்டாள். 'ஒருவர் தான்' என, கூறினேன். இல்லை, 'இரண்டு பேர்' என, புத்தகத்தை காட்டினாள். ஓய்வுபெற்ற தொழிலாளர் நல ஆய்வாளரான, என் தந்தையிடம் கேட்டதற்கு, அவரும், 'அவ்வையார் ஒருவர் தாண்டா...' என, கூறினார்.நான் படித்தபோதும், ஏன், நாம் அனைவரும் படிக்கும்போது, அவ்வையார் ஒருவர் தான் என்பதைப் போல், புத்தகங்களில் கூறப்பட்டிருந்தன.இப்போது, திடீரென, 'இரு அவ்வையார்' என, கல்வித் துறை கூறியுள்ளது வியப்பளிக்கிறது. உண்மையிலேயே, அவ்வையார் எத்தனை பேர் என்பதை, கல்வித் துறை தெளிவுபடுத்த வேண்டும்.

விளக்குமா கல்வி துறை:

இருவரோ அல்லது இருவருக்கு மேற்பட்டவரோ இருந்தனர் எனில், இத்தனை ஆண்டுகளாக, இந்த விவரங்களை, பாட புத்தகங்களில் வெளியிடாதது ஏன் என்பதையும், கல்வித் துறை விளக்க வேண்டும்.இவ்வாறு, அசோக் கூறினார்.

இது குறித்து, சென்னை அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றின், மூத்த முதுகலை தமிழ் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'ஓய்வுபெற்ற பேராசிரியர், கோவிந்தராஜன் எழுதிய புத்தகத்தில், நான்கு அவ்வையார் இருந்ததாக, குறிப்பிடப்பட்டுள்ளது. சங்ககால அவ்வையார், திருவள்ளுவர் சகோதரியான ஒரு அவ்வையார் உட்பட, நான்கு பேர் என, குறிப்பிடப்பட்டுள்ளனர். உண்மையில், அவ்வையார் எத்தனை பேர் என்பதற்கு, ஆதாரப்பூர்வமான சான்றுகளோ, நுால்களோ இல்லை' என, தெரிவித்தார்.

மூன்று பேர் இருந்தனர்:

பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'சங்க கால அவ்வையார், ஆத்திச்சூடி பாடலை எழுதிய அவ்வையார், நீதி நுால்களை எழுதிய அவ்வையார் என, மூன்று பேர் இருந்தனர்' என்றார்.தமிழ் ஆசிரியர், கல்லூரி பேராசிரியர் அளவிலேயே, அவ்வையாரைப் பற்றி, இவ்வளவு குழப்பங்கள் இருப்பதற்கு, அவ்வையாரைப் பற்றிய முழுமையான ஆய்வுகள் நடக்காததும், அது குறித்த ஆய்வு அறிக்கைகள் வெளி வராததும் தான் காரணம் என்பது தெளிவாகிறது.

'மேல் மட்ட அளவிலேயே, இவ்வளவு குழப்பங்கள் இருந்தால், பள்ளி மாணவர்களுக்கு, எப்படி சரியான தகவல்களை தர முடியும்..., வருங்கால துாண்களாக இருக்கும் மாணவ சமுதாயத்திற்கு, எந்த விஷயமாக இருந்தாலும், அதைப்பற்றி, முழுமையாக, தெளிவான தகவல்களை தர வேண்டும். இதற்கு, சம்பந்தப்பட்ட அரசு துறைகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

 மூலப் பிரதி: தினமலர் செய்தி (13.11.2013)